சாதாரணமாக குழந்தைகள் கீழே விழுந்துவிட்டால் பெரியவர்கள் யாராவது கவனித்து, அவர்களை ஓடிச் சென்று தூக்கினால் குழந்தைகள் எதிர் வினையாற்றி அழுவார்கள். அதையே கண்டும் காணாமல் விட்டுவிட்டால் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அமைதியாகி விடுவார்கள். மேலும் தவழும் குழந்தைகளாய் இருந்தால் தவழ ஆரம்பிப்பார்கள். நடக்கும் குழந்தைகளாக இருந்தால் எழுந்து நடக்க ஆரம்பிப்பார்கள். இது அன்றாடம் அவரவர் வீடுகளில் நாம் காணும் காட்சி. இதே போல் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்படி இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினார் என்பதையும், அப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்களை எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதையும் இப்பதிவில் காண்போம்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அழுக்கான உடைகள் அணிந்து வீதியோரம் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து பரிதாபம் கொண்ட ஓர் இளம் துறவி, அவரைக் கூட்டிச்சென்று குளிக்கவைத்து சுத்தம் செய்து, தான் தங்கி இருக்கும் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். தனது குருவிடம் அவரைக் காட்டி ஏதேனும் உதவி செய்யுமாறு கேட்டார். "அவரை அப்படியே ஓரமாக உட்கார விடுங்கள். உணவும் தண்ணீரும் அருகில் வைத்து விடுங்கள். ஆனால் சாப்பிடும்படி கூற வேண்டாம். பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார். நீங்கள் யாரும் அவரைக் கண்டுகொள்ளவும் வேண்டாம்" என்றார் குரு.
அந்த நபர் திடீர் திடீரென கத்துவார். கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து பலர் மீதும் வீசுவார். ஆனால் அவரை அங்கு யாரும் கண்டு கொள்ளவில்லை. சீடர்கள் எல்லோரும் அவரவர் வேலைகளை பார்த்தார்கள். அந்த நபருக்கு எதிர்வினையாற்ற யாருமே இல்லாமல் போனதால் விரைவில் அவர் அமைதியாகிவிட்டார்.
ஒருநாள் அந்த நபர் மற்ற எல்லோரையும் போலவே இயல்பாக தியானம் செய்ய வந்தார். ஆசிரமத்தில் எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தார். இது திபெத்தில் உள்ள பௌத்த மடாலயங்களில் நடக்கும் சிகிச்சை முறை. எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் எப்படிபட்டவரும் அமைதியாகி விடுகிறார் என்கிறார்கள் திபெத்திய மாக்கள். மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதால் தான் ஒவ்வொருவர் மனதிலும் பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் வளர்கின்றன. யாரும் பார்க்கவில்லை என்றால் அது வளர்ந்து கொண்டே போகாது என்பது அவர்கள் கூறும் விளக்கம்.
சிகிச்சைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதை இது போன்ற செயல்முறை கதைகளால் தான் விளங்கிக் கொள்ள முடியும்.