
பணம் அளவாக இருந்தால் நாம் அதை ஆட்சி செய்ய முடியும். அதுவே பணம் அதிகமாக இருக்கும்போது அது நம்மை ஆண்டுவிடும். எனவே அளவுக்கு மீறி பணத்தை வைத்துக்கொள்வதும் ஆபத்து. மன நிம்மதி போய் நல்ல உறக்கம் போய்விடும்.
பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம் என்ற பாடல் கூட உண்டு. சந்தோஷத்தையும் நிம்மதியையும் பணத்தால் மட்டுமே பெற்றுவிட முடியாது. ஆனால் பணமின்றி நம்மால் வாழவும் முடியாது. அதனால்தான் வள்ளுவர் "அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று கூறுகிறார்.
அத்தனைக்கும் ஆசைப்படு என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலரோ அளவோடு ஆசைப்படு என்கிறார்கள். இளைஞர்களோ காசு, பணம், துட்டு, மணி, மணி என்று ஓடுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரோ எனக்கு வரும் வருமானத்தில் என்னுடைய கடமைகளை என்னால் சரிவர செய்ய இயலுமா என்று கவலை கொள்கிறார்கள். வயதானவர்களோ வரும் பென்ஷனுக்குள் இந்த மாதத்தை ஓட்டியாக வேண்டும் என்று கவலை கொள்கிறார்கள்.
இப்படி பணம் சூழ்ந்த உலகம் தான் இது. டிஜிட்டல் உலகில் வரவுக்கும், சேமிப்புக்கும் பல வழிகள் இருந்தாலும் நம்மிடம் இருக்கும் பணத்தை உருவும் கவர்ச்சிகரமான தூண்டில்களும் நிறைய உள்ளன. இவற்றிற்கு மத்தியில் வரவு செலவு, சேமிப்பு, கடன், முதலீடு என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்யவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பணத்தை பாதுகாத்து ஒரு வளமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் முதலில் நமக்கு பணத்தின் அருமை தெரிய வேண்டும். சிலர் ஊதாரித்தனமாக வரவுக்கு மேல் செலவு செய்வதும், பின்பு கடன்பட்டு வாழ்க்கையை நொந்து கொள்வதும் உண்டு.
வேறு சிலரோ பணத்தை செலவழிக்க ரொம்பவே யோசித்து, கஞ்சத்தனப்பட்டு தேவைக்கு கூட செலவழிக்காமல் சிக்கனம் என்ற பெயரில் வாழ்வதையும் பார்க்கிறோம். பிறகு எப்படித் தான் வாழ்வது என்கிறீர்களா?
தேவைக்கு ஒரு வீடு, குழந்தைகளின் படிப்பு செலவிற்கு, வீட்டில் அத்தியாவசியமான பொருட்களை வாங்குவது, கடன் வாங்கியாவது செலவழிக்காமல் தேவை அறிந்து செலவு செய்வது, சம்பாதிப்பதில் ஒரு பகுதியை எதிர்காலத்திற்காக சேர்ப்பது, ஆடம்பரங்களை தவிர்ப்பது போன்றவற்றை செய்தாலே நிம்மதியான, அமைதியான, சந்தோஷமான வாழ்வு நிலைக்கும். பணத்தின் அருமை தெரிந்தவர்கள் உழைக்க தயங்குவதில்லை.
நம் வாழ்வின் தரத்தை உயர்த்த வேண்டுமானால் முதலில் நெகட்டிவ் எண்ணங்களை விரட்டி வருமானத்தை பெருக்க வேண்டும். அத்துடன் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பதற்கு ஒதுக்க வேண்டும். அப்படி சேமித்த பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்யவும் தெரியவேண்டும்.
பணம் இருந்தால் சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும் என்பது இல்லை. ஆனால் பணம் இன்றி இவை கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். வயதான காலத்தில் யாரையும் எதிர்பார்த்திராமல் வாழ்வதற்கு ஒரு நீண்ட கால சேமிப்பு அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவ காப்பீடு என்பதும் மிகவும் அவசியம். கூடுமானவரை தவணை முறையில் பொருட்களை வாங்குவதை தவிர்த்தல் நல்லது. தேவையற்ற பொருட்களை வாங்கினால் ஒரு கட்டத்தில் தேவையான பொருட்களை விற்க வேண்டி வரும். எனவே வரவுக்குள் செலவை அமைத்துக் கொள்வது நல்லது.
பணம் அவசியம்தான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நட்பையும், உறவையும் இழக்கக்கூடாது. அதேபோல் பணத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுவதும் தவறு. வாழ்க்கையில் பணம் மகிழ்ச்சி தரும். எப்பொழுது தெரியுமா? அதனை தேவையறிந்து மற்றவர்களுக்கு கொடுக்கும்பொழுது!
என்ன நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!