
வாழ்க்கையில் நாம் அடைய நினைக்கும் குறிக்கோள் சில இருக்கும். அப்படிப்பட்ட ஒவ்வொரு குறிக்கோளையும் அடைய பல இலக்குகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், நகருக்குள் பெரிய ஜவுளிக் கடைக்குச் சொந்தக்காரர் ஆவது என்பது ஒருவருடைய இலக்காக இருக்கலாம். அல்லது பள்ளிப் படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர், மதிப்பு மிகுந்த கல்லூரி ஒன்றில் குறிப்பிட்ட பாடத்திட்டத்தினை எடுத்துப் படிப்பது என்ற இலக்கினைக் கொண்டிருக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஆண்டுக்குள் தனது நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஐ. 9000 தரச் சான்றிதழ் பெற்றுவிடுவது என்பது ஒரு நிறுவன அதிபரின் இலக்காக இருக்கலாம். கோடி ரூபாய் சேர்ப்பது முதல் கோயில் கும்பாபிஷேகம் செய்து வைப்பதுவரை இலக்கு எதுவாகவும் இருக்கலாம்.
நபருக்கு நபர் மாறுபடும். ஒரே நபருக்கேகூட காலகட்டத்துக்கு ஏற்ப இலக்குகள் மாறலாம். மாறட்டும். முக்கியம் என்ன என்றால், முன்பு பார்த்ததுபோல, இலக்கினை அடைய, எதை எப்பொழுது எவ்வளவு செய்யவேண்டும் என்று முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட உலகளாவிய இந்திய நிறுவனத்தில் (Indian MNC) வேலைக்குச் சேரத்துடிக்கும் ஒரு இளைஞனை எடுத்துக் கொள்ளலாம் அவனுடைய இலக்கு அத்தப் பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதென்றால், அவன் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது, அந்த நிறுவனத்தில் சேர குறைந்தபட்ச தகுதி என்ன என்பதுதான்.
சொல்லப்போனால், அதுகூட பின்புதான். அதற்கு முன் அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதற்கே கூட ஏதாவது குறைந்த பட்ச தகுதிகள் இருக்கலாம். (இன்போசிஸ் போன்ற சில பெரிய நிறுவனங்களில் கல்லூரி மட்டுமல்ல. பத்தாம் வகுப்பு முதலே விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு (60%) மேலாக மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி எடுத்தவர்களைத்தான், தேர்வு நிறுவன வேலைக்கு எழுதவே அழைக்கிறார்கள்.)
இப்படிப்பட்ட ஒரு மிக முக்கியமான தகவலைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு மாணவன், ஆசை மட்டும் வைத்துக் கொண்டிருந்தால், கனவு கண்டுகொண்டிருந்தால், அவனால் அவனது இலக்கினை அடைய முடியாது. தகவல் தெரிய வருகிற பொழுது, அவன் பத்தாவது, +2 மற்றும் கல்லூரிப் படிப்பில் முதல் இரண்டாம் ஆண்டு படிப்புகளை முடித்திருந்தால், அதற்கு முந்தைய வருட மதிப்பெண்களை அதுசமயம் என்ன செய்தாலும் மாற்ற முடியுமா? பின்பு, அவனுடைய கனவு என்ன ஆவது?
மதிப்பெண் மட்டுமல்ல. வயது, எடை, உயரம், கண் பார்வை, சில குறிப்பிட்ட திறன்கள், நேரம் என்று ஒவ்வொன்றுக்கும் எத்தனையோ தகுதிகள் கட்டாயமாக இருக்கின்றன. குறிப்பிட்ட அளவு இருந்தால்தான் நுழையவே முடியும். குறிப்பிட்ட காலத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆக, தேவை, தகவல்கள்.
எந்த இலக்கினையும் அடைய, 'எதை, எப்பொழுது, எவ்வளவு, எப்படிச் செய்யவேண்டும்?' என்கிற தகவல். 'சொல்லக் கேட்டு' 'ஊகம் செய்து', 'கிட்டத்தட்ட' தகவல்கள் அல்ல சரியான தகவல்கள் இலக்கினை அடைய உதவுகின்றன.