கலைடாஸ்கோப்பை (Kaleidoscope) வைத்துக்கொண்டு பார்ப்பது குழந்தைகளுக்கு விளையாட்டு, பிற வயதினருக்கு பொழுதுபோக்கு. கலைடாஸ்கோப்பை பார்த்தவர்களுக்குத் தெரியும், வண்ண வண்ண கலவையில் கண்களுக்கு விருந்து அளிக்கும் கோலங்களைக் கண்டு ரசிக்கலாம் என்பது. அதை அப்படியே ஆடாமல், அசையாமல் வைத்துக்கொண்டு பார்த்தால், அதன் எதிர்புறத்தில் தோன்றும் வண்ணங்களின் கலவை ஒரு அழகிய டிசைனாக அப்படியே தெரியும். ஆனால், அந்த உருளையை சிறிது ஆட்டினாலும், திருப்பினாலும் சற்று முன் காணப்பட்ட கலவை உருவங்களை ஒதுக்கிவிட்டு, வேறு கலவையில் (different combination) புதிய உருவங்கள் அந்த இடங்களில் ஆக்கிரமித்து காட்சி அளிக்கும். ஒவ்வொரு முறை மாறும்பொழுது
புது வண்ணம், புது டிசைன் கண்களுக்கு காட்சி அளித்து பரவசப்படுத்தும்.
உள்ளே இருப்பவை மாறுவதை, பார்ப்பவர்களால் மாற்ற முடியாது. எப்படி தோன்றுகின்றதோ அப்படிப்பட்ட உருவத்தை மட்டும் கண்டு ரசிக்கலாம். நமது வாழ்க்கையும் அப்படிப்பட்டதே. பல விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் கிடையாது. நம்மால் உபயோகிக்க முடியும், கொஞ்சம் பயனும் பெறலாம். ஆனால் திருத்தி அமைக்க முடியாது.
தனிப்பட்ட மனிதனின் விருப்பு, வெறுப்புக்கள் அவனது தனிப்பட்ட இஷ்டம். ஆனால் தனிப்பட்ட மனிதனாக, இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து காலம் தள்ள முடியாது.
வாழ்க்கை என்பது சலனமற்ற தேங்கி இருக்கும் நீர் அல்ல ( Life is not still water). ஒரு கல் விழுந்தால் அதன் ரிசல்டாக அந்த நீரில் அதிர்வு ஏற்பட்டு, நீர் வளையங்கள், வட்டங்கள் ஏற்படும். சிறிது நேரம் கழித்து சகஜ முந்தைய நிலைமைக்கு திரும்பி விடும்.
ஆனால், இங்கு இந்த மாதிரி நீரை வாழ்க்கைக்கு உதாரணமாக கூறாமல், கலைடாஸ்கோப்பை மேற்கோள் காட்டியதன் காரணம், கலைடாஸ்கோப் சிறிது அதிர்ந்தாலும் முன்பு இருந்த அதே சகஜ நிலைக்கு திரும்பாது. புது உருவம், புது டிசைன்தான் தோன்றும்.
எப்படி கலைடாஸ்கோப் கருவியின் போக்கு சிறிது அசைத்தாலும் மாறிக்கொண்டே இருக்கின்றதோ, மனிதனும் அவனை அறியாமலே தனது வாழ்க்கையில் பல வகை மாறுதல்களை சந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உட்படுத்த படுகின்றான்.
மேலும், அடுத்து என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பது தெரியாமலும், அறியாமலும் மனிதனை வாழ்க்கை அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதுதான் பிராக்டிக்கலான உண்மை.
ஒரு மனிதனின் வாழ்க்கை சக்கரத்தில், பலரின் பங்களிப்பு இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக, தாங்கள் விமான நிலையம் சென்று விமானத்தில் பறந்து செல்ல வேண்டும். முன் கூட்டியே திட்டம் இட்டு, டிக்கெட் புக் செய்து ரெடியாக இருக்கிறீர்கள். விமான நிலையம் செல்வதற்கு வாடகை கார் புக் செய்துவிட்டு காத்துக்கொண்டு உள்ளீர்கள். சில, பல காரணங்களால் அந்த வாடகை கார் இன்னும் தென்படவில்லை. உங்களால் அந்த டிரைவரை உடனே கான்டாக்ட் செய்ய முடியவில்லை. நேரம் வேகமாக நகர்கின்றது. அவரை கான்டாக்ட் செய்ய முடியும்பொழுது; அவர் கூறும் காரணம் எரிச்சல் அடைய வைக்கின்றது. ஒரு மாதிரி விமான நிலையம் அடைந்து விமானத்தில் அமரும் வரையில் எத்தனை சராசரி மனிதர்களால் பதட்டம் கொள்ளாமல், ரியாக்ட் ஆகாமல் இருக்க முடியும்? இவ்வளவிற்கும் தவறு கொஞ்சம் கூட உங்கள் மேல் இல்லை.
எனவே, கலைடாஸ்கோப்பின் உள்ளே தெரியும் மாற்றங்கள் எவ்வாறு வெளியே ஏற்படுத்தப்படும் அதிர்வுகள் மற்றும் செயல்பாட்டின்படி நடைபெறுகின்றதோ, மனிதனின் வாழ்க்கையும் பிறரின் பங்களிப்பை சார்ந்துள்ளது, என்பதை உணர்ந்து வாழ வேண்டும். அவர்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளை, அவ்வளவு சுலபமாக ஒதுக்கவும் முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.