குளிர்காலத்தின் இறுதி கட்டத்தை நாம் நெருங்கி விட்டாலும், இப்போதும் ஓரளவுக்கு மிதமான குளிர் இருக்கத்தான் செய்கிறது. குளிர்காலத்தில் மெத்தையில் படுத்துக்கொண்டு கத கதப்பாக தூங்குவது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் இதற்கு மத்தியில் காலையில் எழுந்து நம்முடைய தினசரி வேலையை தொடங்குவது கடினமான செயல் என்று தான் சொல்ல வேண்டும்.
பொதுவாகவே குளிர்காலத்தில் காலையில் சூரிய ஒளி குறைவாக இருக்கும் என்பதால் ஒரு வகையான சோம்பலை அது ஏற்படுத்தும். இதன் காரணமாகவே காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கவே சோம்பலாக இருக்கும். அப்படி உணரும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இப்போது நான் சொல்ல போகும் 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.
மார்னிங் ரோட்டின் முக்கியம்: நாம் நம்முடைய வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் எனில், காலைப் பொழுதை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என பல சுய முன்னேற்றப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே காலையில் நீங்கள் சீக்கிரம் எழுந்து உங்கள் வேலைகளை செய்யத் தொடங்கினால் மட்டுமே, உங்களது லட்சியத்தை அடைய முடியும் என்ற மனநிலையை எப்போதும் வைத்திருங்கள். இது உங்களுக்கு சோம்பலைக் கொண்டு வராது.
இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற இலக்கை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய வேண்டும். இதை இரவு தூங்கும்போது நிர்ணயித்துவிட்டு தூங்கினால், காலையில் எழுவதற்கு ஒரு உந்துதலாக இருக்கும். இப்படி உங்களுக்கு நீங்களே காலக்கெடுவை விதிக்கும்போது, அதை மீறக்கூடாது என்கிற மனநிலை உங்களை காலையில் சுறுசுறுப்பாக எழுந்திரிக்க வைக்கும்.
தியானம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் நாம் காலையில் தியானம் செய்ய வேண்டியது அவசியம். அப்படி செய்யும்போது நமது உடலும் மனமும் அமைதியடையும். இதனால் நம்முடைய புத்திக்கூர்மை அதிகரித்து அன்றைய பொழுதின் பணிகளை உற்சாகமாக செய்ய உதவும்.
நீங்கள் வெற்றி பெறுவது போல் சிந்தித்துப் பாருங்கள்: உங்களுக்கு காலையில் படுக்கையில் இருந்து எழுவது கடினமாக இருந்தால், ஒருவேளை வாழ்க்கையில் நீங்கள் நினைத்தது அனைத்தையும் அடைந்து வெற்றி அடைந்தால் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அந்த சிந்தனை உங்களுக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உடனடியாக எழுவதற்கு உதவும். மேலும் உங்களது இலக்கை அடையத் தேவையான விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொள்ளுங்கள். அதன் மூலமாகவும் உங்களுக்கு உந்துதல் கிடைத்து சோம்பலை விரட்டலாம்.
அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளும் நமது வாழ்வில் மிக முக்கியமானது. எனவே அன்றைய பொழுதில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளைப் பற்றி சிந்தித்தாலே சோம்பேறித்தனம் சுத்தமாக விலகிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக இந்த சோம்பலை விரட்டுவதற்கு முயற்சிகளை எடுங்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் காலம் செல்லச் செல்ல காலையில் புத்துணர்ச்சியுடன் நீங்கள் எழ முடியும்.