இந்த தலைப்பை பார்த்ததும், என்ன இது துன்பத்தை எரிப்பதா? எப்படி? என்று யோசிக்கிறீர்களா? அதை பற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கப் போகிறோம் வாங்க.
துன்பம்ங்குறது யாருக்கு தான் இல்லை. நம் வாழ்க்கையில் ஆசைப்பட்ட விஷயங்கள் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றால் துன்பம் தான். அழுகின்ற குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என்றால் துன்பம். வேலைக்கு செல்பவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கிடைக்கவில்லை என்றால் துன்பம். அவ்வளவு ஏன் இந்த கோடைக்காலத்தில் திடீரென்று கரண்ட் போய்விட்டால் கூட துன்பமோ துன்பமில்லையா?
இந்த துன்பமெல்லாம் வேண்டியது கிடைத்ததும் மறைந்துவிடும். ஆனால் சிலருக்கோ சில துன்பங்கள் காலத்துக்கும் மறையாது மனதிலே இருக்கும். அதை விட்டொழிக்க முடியாமலோ அல்லது எப்படி என்பது தெரியாமலோ மனதிலேயே சுமந்து கொண்டிருப்பார்கள்.
ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை நிரப்பி அதை உயர்த்தி பிடிக்கும்போது முதல் 5 நிமிடம் தாக்கு பிடித்து விடலாம். அடுத்த 10 ஆவது நிமிடம் பல்லை கடித்து கொண்டு பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் நேரம் போக போக கண்ணாடி டம்ளரின் எடை பெரிய பக்கெட் முழுவதும் தண்ணீரை தூக்கி சுமப்பது போல கணக்க ஆரமிக்கும். தூக்கி பிடிக்க முடியாமல் கையும் மரத்து போய்விடும். அதுபோல தான் மனதில் இருக்கும் சிறிய துன்பம் கூட நாளாக நாளாக எடைக்கூடிவிடும்.
இதற்கு ஒரு சரியான தீர்வு சொல்கிறேன் கேளுங்கள். முதலில் ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டு அதில் உங்கள் மனதில் இருக்கும் கவலையை எழுதுங்கள். உங்கள் மனதில் இருக்கும் கவலை சிறியதோ அல்லது பெரியதோ எப்படி வேண்டுமோ இருந்துவிட்டு போகட்டும் மனதில் உறுத்திக்கொண்டிருப்பதை ஒன்று விடாமல் பேப்பரில் எழுதுங்கள்.
அனைத்தையும் எழுதி முடித்ததும் அந்த பேப்பரை நான்காக மடித்து நெருப்பில் போட்டு எரித்து விடுங்கள். இப்போது உங்கள் மனதில் உள்ள கணம் குறைந்தது போல இருக்கும்.
இதிலேயே இன்னொரு வகையிருக்கிறது. அதாவது கஷ்டங்களை எழுதிய பேப்பரை அப்படியே கப்பல் செய்து ஆற்றில் விடுவது. பேப்பர் கப்பல் ஆற்றில் அசைந்து அசைந்து நம்மை விட்டு நகர்ந்து செல்வது நம் மனதில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி செல்வது போல இருக்கும்.
இதையெல்லாம் கேட்க சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், இப்படி செய்வது நம் மனதை லேசாக்குவதற்கான சுலபமான வழியாகும். சில விஷயங்களை நாம் முழுமையாக நம்ப வேண்டும். இதையெல்லாம் செஞ்சிட்டா சரியாகி விடுமா? என்கிற எண்ணத்தோடு செய்யாமல் முழுமையாக கஷ்டங்களை விட்டொழியுங்கள். அனைத்து துன்பங்களும் நீங்கி இன்பம் பிறக்கும்.