
வீடு என்பதை பெண்கள் ஆட்சிக்குட்பட்ட ஒரு சிறிய நாடென்று நவிலலாம். அந்த நாட்டை ஆளக்கூடிய அரசி அந்த இல்லத்தின் தலைவியே. அவள்தான் குழந்தைகளுக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு, தாய் எவ்வழியோ குழந்தைகளும் அவ்வழியே.
ஒரு நல்ல தாய் நூறு பள்ளிகளுக்குச் சமம் என்கிறார், ஜார்ஜ் ஹெர்பரட் நமது நாட்டுப் பழமொழி கூட இப்படித்தான் சொல்கிறது. தாயைப் போலப்பிள்ளை நூலைப் போலச் சேலை என்று ஒரு தாயின் நல்ல பண்பாடுகள் இவைகளை எல்லாம் உண்மையிலேயே தெரிந்துகொள்ள வேண்டிய இடம் வீடுதான்.
எங்கெங்கு எல்லாம் பெண்கள் தாழ்ந்தவர்கள் ஆகவும் இழிந்தவர்களாகவும் மதிக்கப்படுகிறார்களோ அந்த இல்லமும், நாடும் ஒரு போதும் உயர்வானதாக மதிக்கப்படமாட்டாது.
'அன்னை' என்று போற்றப்படுவர்கள் அமைதி, அன்பு, அருள். அடக்கம், இனிமை, எளிமை, மரியாதை, விட்டுக்கொடுக்கும் பெருமனப் பண்பு போன்ற நல்லியல்புகள் அமையப்பெற்று குழந்தைகள் போற்றிப் பின்பற்றக் கூடிய நல்லதோர் எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.
அத்தகைய இல்லமே ஒரு நல்ல ஆலயமாகும். இல்லம் என்பது தாங்குமாடமாக இல்லாமல் அன்பு இல்லமாக இயங்க வேண்டும் பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை உணரவேண்டும்.
சீலம் நிறைந்த செல்வங்களை நாட்டின் வருங்காலக் காவலர்களை உருவாக்கும் திறன்படைத்தவர்கள் பெண்கள், வள்ளுவர் வாழ்க்கைத்துணைநலம்' என்ற ஓர் அதிகாரத்தின் வாயிலாக பெண்களின் மாண்பை மிகச்சிறப்பாக எடுத்தியம்புகிறார்.
மங்கையர்கள் மனைமாட்சியின் வித்தாவார்கள், தாயினும் சிறந்த உயிரினம் உலகத்தில் பிறந்ததில்லை' என்கிறார் அறிஞர் பெர்னாட்ஷா
'தாய்மை' வழிபடுவதற்குரிய புனித ஆலயமாகும். கிறிஸ்து பிறக்கும் காலத்திற்கு முன்பு தொட்டு இன்று வரை 'பெண்மை நனிசிறந்த நல்லறம் படைக்கும் தன்மையாக விளங்கி வருகிறது.
நாட்டின் நலமும், வீட்டின் நலமும் நங்கை ஒருத்தியின் நல்லிரு கரங்களில்தான் உள்ளது.
பெண் நினைத்தால் இப்பாரினை அன்பும், அறமும் செழித்து ஒங்கும் தெய்வீக உலகமாக மாற்ற முடியும். அதை உணர்ந்து மகளிர் செயல்பட்டு வெற்றிப்பாதையை அமைக்க வேண்டும். அதுவே அவர்கள் ஆற்றும் நற்பணி, அப்பணியே அவர்களை மென்மேலும் உயர்த்தும்.
பெண்களின் விடுதலை - மேம்பாடு, முன்னேற்றம் பற்றிப் பாடிய கவிஞர்களில் பாரதியார் மிகச்சிறப்பாகப் பாடிய தலை சிறந்தவராவார்.
"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமே!' என ஆனந்தமாகப் பாடிய அற்புதக் கவிஞராவார்.
பெண்ணினத்தின் பெருமைபற்றி பேசுவது மட்டும் நமது கடமையல்ல. பெண்ணுக்குரிய மரியாதைகளை வழங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ்வதே இல்லறத்தின் இனிய பண்பாகும்.