சந்தர்ப்பங்கள் வரும் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். சந்தர்ப்பங்களைத் தேடி பெறுபவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். இது பெர்னாட்ஷாவின் கருத்து. சந்தர்ப்பங்கள் நம்மை நாடிவரும் என காத்திருக்க வேண்டாம். நாம்தான் தேடிப் போக வேண்டும். நல்ல சந்தர்ப்பம் எதுவென தேடி ஓடி சென்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும். -பெர்னாட்ஷா அரிய சிந்தனையாளர்.
ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் பற்றிக்கொள்ளும் பக்குவம். சிறிய பொறியாய், சந்தர்ப்பம் தெரிந்தாலும் விடாத சாமர்த்தியம் தான் நம் வெற்றிக்கு அடிப்படை. முடியுமா? முடியும் என நினைக்கிறவனுக்கே அது முடியும். பார்க்கலாம் எனப் பதில் கூறுகிறவன் குழம்புவான். முடியாது என்பவனால் எச்சமயத்திலுமே எதுவுமே முடியாதுதான்.
"பெரியவர்களாய் பிறப்பவர்கள் சிலர் சிலர் பெருமையை தேடிக் கொள்பவர் சிலரிடம் பெருமை பிறரால் திணிக்கப்படுகிறது" இது ஷேக்ஸ்பியர் சொன்னது.
ஷேக்ஸ்பியர் சொல்வதில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பிறப்பது நிலைக்காது. திணிப்பது சிறக்காது. தேடிச்சென்று சாதித்து பெருமை காப்பதே சிறப்பு. தேடிச் செல்லல் என்பது பெருமை தரும் நல்ல சந்தர்ப்பங்களை நாடிச் செல்வதே. நாமே நாடிச் சென்று நற்செயலால் பெருமை தேடுவதே நிலைத்த புகழுக்கு வழிவகுக்கும்.
செயல் சிறிதா? இல்லை பெரிதா? என்பது கூட முக்கியமல்ல. நம்மால் செய்ய முடிந்ததை சலிப்பின்றி செய்ய வேண்டும். செய்து கொண்டே இருக்க வேண்டும். சதா செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் பெருமை நம் வீடு தேடி வந்து கதவை தட்டும்.
வாஷிங்டன் தலைமை ஏற்றபோது கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாய் பயன்படுத்தி சுதந்திரப் போரில் தளபதியாய் வென்றதால் அமெரிக்க குடியரசுத் தலைவர் பதவி என்கிற பெருமை சேர்ந்தது.
அடிமை முறை ஒழிப்பால் ஆபிரகாம் லிங்கனுக்கு அழியாப் புகழ் நிலைத்தது. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி மகன்தான் அவர். மக்களின் வெறுப்பு அரசர் மீது. அதனை அற்புதமாய் பயன்படுத்தியதால் லெனின் புகழ் சிறக்கிறது. சாதாரண ஏழை குடும்பத்துப் பிள்ளைதானே நெப்போலியன். பிரெஞ்சு புரட்சியை அவர் பயன்படுத்திக்கொண்ட விதத்திலேயே வெற்றி அவருக்கு.
காபூரில் ஆட்சி இழந்த பாபர் 1526 பானிபட் போரின்போது அதனை பயன்படுத்தி வெற்றி கண்டதால்தானே முகலாய சாம்ராஜ்யம் உருவானது. இப்படி சரித்திர சான்றுகள் ஏராளம். ஏராளம். ஆகவே நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாதகமான நிலையை தேடிச்செல்ல இப்பொழுதே புறப்படுவோமா!