எத்தனை முறை தவறவிட்டாலும் விடாமல் தொடரும் சந்தர்ப்பங்களை விடாமல் பற்றிக் கொண்டால் வெற்றி சாத்தியம். ஆம் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அனைவருடைய வாழ்க்கையிலும் குறுக்கிடவே செய்யும். அவைகளை உபயோகித்துக்கொள்ள தவறிவிடுவதுதான் பலர் வெற்றி அடையாமல் இருப்பதற்கான காரணம்.
நாம் வேலை பார்த்துவரும் அலுவலகத்தில் நமது உயர் அதிகாரி விடுமுறையில் சென்று இருக்கும் சமயம் அந்த அலுவலகத்தின் அதிகாரிக்கு அவசரமாக அறிக்கை ஒன்று தேவைப்படுகிறது என்று கற்பனையில் பார்ப்போம். அவர் அதைப் பற்றி நம்மிடம் பேசும் போது "மேனேஜர் ஊருக்கு சென்றிருக்கிறார் அவருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை எப்படி தயாரிக்க வேண்டும் என்பது தெரியும் அவர் வந்தவுடன் அறிக்கையை தயாரித்து அனுப்புகிறேன்" என்று தட்டிக் கழிக்காமல் அந்த அதிகாரியின் கவனத்தை கவர்வதற்கான சந்தர்ப்பம் அது என்று எண்ணி அந்த அறிக்கையை தானே தயார் செய்து தருவதாக கூறி உடனடியாக தயாரித்து தந்து அந்த அதிகாரியினா நன்மதிப்பை பெறுபவர்கள் வெற்றிக்கான சந்தர்ப்பத்தை நழுவ விடாதவர்கள் ஆகிறார்கள். அவருடைய பதவி உயர்வுக்கு இதை ஒரு சந்தர்ப்பமாக அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் வானத்திலிருந்து குதிக்கப்போவதில்லை. அதற்காக காத்திருந்து முடிவில் நிறைய ஏமாற்றத்தை காணாமல் புத்திசாலிகள் சிறிய முன்னேற்றம் தரும் சாதாரண சந்தர்ப்பங்கள் எதிர் வந்தால் கூட முழுக்க பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய நிலைமையை சிறிது சிறிதாக உயர்த்திக் கொள்கிறார்கள்.
சிறிய பலன்களை கொடுக்கும் நிறைய சந்தர்ப்பங்கள் அனைவருடைய வாழ்க்கையிலும் குறுக்கிடும். இந்த சின்ன காரியங்களை செய்ததால் எனக்கு சிறிய பலன்தானே கிடைக்கும் என்று நினைத்து பலரும் அந்த சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள தவறி விடுகிறார்கள்.
உதாரணமாக ஒருவர் மாதம் சில நூறு ரூபாய்கள் சேமித்து வந்தால் பத்து வருடங்கள் கழித்து அவரிடம் கணிசமான தொகை நிச்சயம் சேர்ந்திருக்கும். அவர் தான் சேமித்து வைத்த தொகையை கொண்டு சுயதொழில் செய்து தன்னை பெரிய பணக்காரனாக உயர்த்திக் கொள்ள முடியும். சிறிது சிறிதாக பணம் சேர்த்து வைத்ததினால்தான் அவருக்கு தொழில் செய்து நிறைய பணம் சம்பாதிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சில நூறு ரூபாயில் சேமித்து வைப்பதனால் என்ன பயன் என்று நினைத்து பணம் சேர்க்கத் தவறினால் அவர் வாழ்க்கையில் பின் தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டி இருக்கும்.
"சிறு துளி பெருவெள்ளம்" என்பதுபோல் சிறிய முன்னேற்றங்கள் "பெரிய வெற்றி" என்ற மலை உச்சிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகளாக மாறுகின்றன. சிறந்த மனிதர்கள் வெற்றி தரும் சந்தர்ப்பங்கள் தங்களைத் தேடிவரும் என்று கருதி அவற்றிற்காக காத்துக்கொண்டே இருக்காமல் வெற்றி கிடைப்பதற்கான சந்தர்ப்பங்களை தாங்களே உருவாக்கிக் கொண்டு விடுவார்கள்.
ஒரு நகரத்தில் பல நூற்றாண்டுகளாக ஒரு கரும்பாறை பாதி அளவு மண்ணில் புதைந்தே கிடைத்தது. பல தலைமுறைகளை சேர்ந்த மக்கள் அந்த பாறையை உபயோகமற்றது என்று கருதி தவிர்த்து வந்தார்கள். மைக்கேல் அஞ்சிலோ என்ற ஒரு சிற்பி அந்த பாறையை கண்டவுடன் "இந்த பாறையில் ஒரு அழகான தேவதை சிறைப்பட்டிருக்கிறாள். அவளை நான் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று கூறி உளியைக் கொண்டு பாறையை செதுக்கி அழகான தேவதை ஒன்றின் சிலையை வடித்தார். தான் முன்னேறுவதற்கான சந்தர்ப்பம் அந்த பாறையில் ஒளிந்து கொண்டிருப்பது அந்த சிற்பிக்கு மட்டும்தான் தெரிந்தது. பிறகு அந்த சிற்பிக்கு பாராட்டுகள் கிடைத்ததை சொல்லவும் வேண்டுமோ?
இப்படித்தான் தன்னை தயாரான நிலையில் வைத்துக் கொண்டிருப்பவனால்தான் எதிர்வரும் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகவே வெற்றி வேண்டும் என்று நினைப்பவர்கள் எதிர்வரும் சந்தர்ப்பங்களை இனம் கண்டு அவற்றை பயனுள்ளதாக மாற்றி சந்தோஷம் பெறுங்கள்.