என் அம்மா ஒரு அதிபயங்கர உழைப்பாளி. ஒருநாள் கூட வேலைக்கு செல்லாமல் இருக்க மாட்டார். சில சமயம் ஞாயிறுகளில் கூட வேலைக்குச் செல்வார். ஒரு நாளேனும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருங்கள் என்று கூறினால், வேலைக்கு சென்றால் தான் என் நிம்மதியாக உள்ளது. வீட்டில் அமைதியாக அமர்ந்திருந்தால் என்ன வரப்போகிறது என்று கூறுவார். ஞாயிறுதோறும் விடுமுறை நாட்களில் கூட வேலைக்கு சென்றிருக்கலாமே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்.
ஆனால், CORONA காலத்தில் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அனைவரும் வீட்டிலேயே அடைந்து கிடந்தோம். என் அம்மாவும் அந்த சமயத்தில் மிக மகிழ்ச்சியாக, மன நிம்மதியுடன் காணப்பட்டார். எனக்கு ஒரே ஆச்சரியம், ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் இருக்க மாட்டாரே, ஆனால் தற்போது அதைப் பற்றி கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறாரே என்று நினைத்தேன்.
இதைப்பற்றி என் அம்மாவிடம் கேட்டபோது, அவர் கூறிய பதில் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அவர் கூறிய பதிலாவது, "எல்லாரும் வேலைக்கு போயி, நான் மட்டும் வீட்ல சும்மா இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கும். ஆனா இப்போ எல்லாருமே ஒட்டுமொத்தமா தானே வீட்ல இருக்கோம். அதனால கவலை இல்லை சந்தோஷமா தான் இருக்கு " என்று கூறினார்.
என் அம்மா கூறிய பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது ஒரு வகையில் உண்மை தானே, பிறரிடம் ஒப்பீடு செய்துதான் நாம் நம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
பிறரைப் போன்று நன்றாக இருக்க வேண்டும்.
பிறரைப் போன்று சம்பாதிக்க வேண்டும்.
பிறரைப் போன்று வீடு, வாசல், சொத்து, சுகம் காண வேண்டும்.
பிறரிடம் நம்மை நல்ல நிலையில் காட்டிக்கொள்ள வேண்டும்.
பிறரை விட ஒருபடி மேலே இருக்கவேண்டும்.
பிறர் நம்மைப் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.
பிறர் போல் அல்லது பிறரை விட நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல வசதி என பிறர், பிறர், பிறர் மட்டுமே நம் அனைவரது எண்ணங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது..
உங்களில் எத்தனை பேர், உங்கள் வீட்டில் மின்சாரம் இல்லையெனறால், உடனடியாக பக்கத்து வீட்டில் மின்சாரம் உள்ளதா எனக் கேட்டு, இல்லை என்றதும், “அப்பாடா எல்லார் வீட்டிலும் மின்சாரம் இல்லை” என்று நிம்மதியாக உணர்ந்துள்ளீர்கள்.
இதுபோன்று அனைத்து விஷயங்களுக்கும் ஒப்பீடு ஒப்பீடு ஒப்பீடு என்று செய்துகொண்டே இருப்பதால்தான் மனிதன் தன் நிலை மறந்து, தன் தனித்துவத்தை இழந்து, இயந்திர வாழ்க்கை வாழத் தொடங்குகிறான்.