
வாழ்க்கை முழுதும் எல்லோரும் சேமித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் பொருள் சேர்க்கிறார். இன்னொருவர் உறவுகளைப் சேமிக்கிறார். மற்றொருவரோ அறிவை சேமிக்கிறார். இப்படி நீங்கள் சேமித்த வைத்ததை நான் என்று உணர்கிறீர்கள். நீங்கள் சேமித்ததோடு உங்களை அடையாளப்படுத்தி விட்டீர்கள். அதனால் உங்கள் இயல்பான அடையாளம் கரைந்து போய்விடுகிறது. சேமிப்பு உங்கள் வாழ்க்கையை வளமாக்குவது உண்மைதான். உங்களில் யார் செல்வந்தர்? அதிகம் சேர்த்தவர் தானே.
இப்போது என்ன சிக்கல் என்றால், நீங்கள் சேமித்த பொருட்களோடு உங்களையும் அடையாளப் படுத்திக் கொண்டு, நீஙகளும் ஒரு பொருளாக மாறிவிட்டீர்கள். உங்கள் உயிர்ப்பு அந்த நிமிடமே காணாமல் போய்விடுகிறது. நீங்கள் உறவுகளால், நட்புக்காக மனிதர்களையும் சேமிக்கிறீர்கள். ஆனால் அவர்களையும் பொருட்களைப் போலத்தானே நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் கணவன், மனைவி, குழந்தைகள் அனைத்தும் உங்கள் சொத்து தானே. உயிரற்ற பொருட்களால் சேமித்துக் பார்த்து, அதில் திருப்தி ஏற்படாதபோது உயிருள்ளவற்றையும் சேமிக்க ஆரம்பிக்கிறீர்கள் அப்படித்தானே?
சேமிப்பது தவறில்லை. ஆனால் அவற்றோடு நீங்கள் அடையாளப்படுத்திக் கொண்டதால், உங்கள் உயிரின் தன்மையான ஆனந்தத்தை உணரமுடியாமல் போகிறது. உங்கள் அனுபவத்தில் உள்ளது எல்லாமே பொருட்கள்தான். உயிரை நீங்கள் உணராததால் நீங்களும் ஒரு பொருளாகவே வாழ்கிறீர்கள். முதலில் ஒரு பொருளோடு அடையாளப்படுத்தினீர்கள். சிறிது காலம் சென்ற பின் இன்னொன்றை சேர்த்துக் கொண்டீர்கள். அதுவும் போதவில்லை என்று இப்படி பிரபஞ்சம் முழுவதும் உங்களுடைய தாக ஆக்கினாலும் நீங்கள் நிறைவடைய மாட்டீர்கள்.
ஏன் இப்படி?. உங்களுக்குள் இருக்கும் உயிர்த்தன்மை இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் திருப்தியடைவதில்லை. அதனுடைய இயல்பும், இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவனுடைய இயல்பும் ஒன்றே. இரண்டுமே எல்லையற்றது. உங்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலமான உயிர்த்தன்மையை எந்த அடையாளங்களுக்குள்ளும் சுருக்கிவிட முடியாது. எதனோடு நீங்கள் அடையாளப்படுத்தினாலும் அது கஷ்டப்படுகிறது. அந்த அடையாளத்தில் இருந்து விடுபட முயற்சிக்கிறது. எல்லையற்ற அதன் சுபாவத்தை ஒரு எல்லைக்குள் அடையாளப்படுத்த நீங்கள் முயன்றால் அது போராடும். அந்த போராட்டம்தான் நீங்கள் அனுபவிக்கும் துயரம்.
பலவிதமான அடையாளங்களில் உங்களை நீங்களே கட்டிப் போட்டிருக்கிறீர்கள். இந்தக் கட்டுக்களை அவிழ்த்தாலே போதும். ஆனந்தம் உங்களைத் தேடிவரும்.