ஒரு கப்பல் கடலுக்குள் போவதில் பல கஷ்டங்கள் உள்ளன. பாறையில் மோதி கப்பல் உடையலாம். திமிங்கிலங்கள் கப்பலை கவிழ்க்கலாம். இப்படி எண்ணற்ற ஆபத்துகள் உள்ளன.
கம்பீரமாகக் கரையில் நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டது என்றால் ஆபத்து இல்லை. ஆனால் கரையில் பாதுகாப்பாக நிற்கவா கப்பல் கட்டப்பட்டது! கடலில் ஆபத்துகளில் கபளீகரம் செய்து கொண்டு கரை மாறிக் கரை சேர்ந்து கடலில் பயணிக்கத்தான் கப்பலே ஒழிய கரையில் பாதுகாப்பாக நிற்க கோடி கோடியாய செலவழித்து யாராவது கப்பல் கட்டுவார்களா?
தரையில் இருக்கும் விமானமும் கரையில் இருக்கும் கப்பலும் பாதுகாப்பானவைதான். ஆனால் அவை அதற்காக உருவாக்கப் படவில்லை. ஆபத்துகளை ஏதிர்கொண்டு சவால்களைச் சந்தித்து சாதித்துக் காட்டவே கோடி கோடியாய் கொட்டி அவற்றை உருவாக்கினோம். பய உணர்ச்சியும் பாதுகாப்பு உணர்ச்சியும் தேவைதான். ஆனால் அது மானுட முன்னேற்றத்தை மழுங்கடித்து விடக் கூடாது. தடைகளை விலக்கி ஜெயிக்கத்தான் மனிதப்பிறவி தரப்பட்டுள்ளது.
எதிர்ப்பற்ற வாழ்க்கைக்கு ஓரு போதும் ஏங்காதீர்கள். விடுதலை இந்தியாவில் பிரதமராக ஜொலித்த ராஜீவ் காந்தியை கூட வரலாறு என்றைக்காவது விழுங்கி விடலாம். ஆனால் அடிமை இந்தியாவில் அணு அணுவாய்ப் போராடி அங்குலம் அங்குலமாக நாட்டை மீட்டிய மகாத்மா காந்தியின் வரலாற்றை ஒருபோதும் விழுங்காது. ராஜகுமாரர்களின் மணிமகுடங்களைவிட ஏசுவின் முள் மகுடம் உலகப் புகழ் பெற்றது. நண்பர்கள் நம்மைச் செதுக்குவதைவிட பகைவர்களே நம்மை செதுக்குகிறார்கள்.
தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்கும் அரசியல்வாதிக்கு அது ஆபத்தான வேலைதான். ஜெயித்தாலும் சரி தோற்றாலும் சரி மக்கள் முன்பு தம்மைத் தயங்காது நிறுத்தி அக்னிப் பரீட்சைக்குத் தயாரான அரசியல்வாதிகளே அதிக உயரம் பறந்தார்கள்.
அளவற்ற பாதுகாப்பு, பய உணர்ச்சியிலிருந்து வெளியில் வாருங்கள். அபிமன்யூ போல வாழ பழகுங்கள். இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய நேதாஜி தனது வீர உரையில், "எனது இராணுவத்தில் சேர்ந்துள்ள உங்களுக்கு சம்பளம் கண்டிப்பாக உண்டு.அந்த சம்பளம் மரணம்." என்றார். அதனால்தான் அவர் மரணமடையவே இல்லை.
ஒரு மகாகவியாக வாழ்ந்த பாரதிக்கு பல சிக்கல்கள் இருந்தன. பாதுகாப்பு உணர்ச்சியால் அவர் சில சமரசங்கள் செய்து கொண்டிருந்தால் பணம் கிடைத்திருக்கும். ஆனால் தமிழ் நாட்டின் எத்தனையோ சுப்புணிகளில் ஒருவனாக செத்திருப்பான் இந்த சுப்ரமணியன் ஆபத்துக்களை எதிர்கொள்ளும். ஆவேசம்..அந்த ஆனந்தப் பரவசம். அதுவரை அவரை மகாகவியாக்கியது. தந்தை பெரியார் ஒரு தன்னிகரற்ற தலைவர். கடும் எதிர்ப்புகளுக்கு கடுகளவும் கவலைப்படாது தன் கருத்துக்களை மக்கள் முன் வைத்தார். ஓரு பொதுக் கூட்டத்தில் அவர் பேசும்போது ஒரு செருப்பு அவர் மீது வீசப்பட்டது. அவர் தயங்கவில்லை. ஒரு செருப்பை வீசினா எப்படி?. இன்னொன்றையும் வீசு. ஜோடியா வச்சுக்கலாம். உனக்கும் பிரயோஜனம் இல்லை. எனக்கும் பிரயோஜனம் இல்லை. ஒண்ணை வீசறயே என்றார். அந்த துணிவே அவர் வெற்றியின் ரகசியம்.
எதிர்ப்பிலேயே வாழுங்கள் வெற்றி நிச்சயம்.