பிரச்னை இல்லாத மனிதனே இருக்க முடியாது. எந்த ஒரு பிரச்னையையும் நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது மகிழ்ச்சியின் இரகசியம். பிரச்னையை மிகப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்க்கும்போது அது தீர்க்க முடியாத விஷயமாக மிரட்.டும். பிரச்னையாக நீங்கள் கருதும் ஒன்றை முதலில் நிதானமாக அசை போட வேண்டும். அதை முழுமையாக புரிந்து கொண்டால் பிரச்னை மாறிவிடும் என்று நம்பிக்கை வரும்.
ஒரு இளைஞனுக்கு நல்ல மார்க் வாங்குவதில் பிரச்னை என்றால் அதன் மூலக் காரணத்தைப் பார்க்கும்போது படிப்பதற்கு சரியான நேரம் ஒதுக்கப்படவில்லையா அல்லது சரியாக பிடிக்கவில்லையா என்று மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஏதுவாக பார்க்கும்போது, வேண்டிய மாற்றத்தை அவனால் ஏற்படுத்திக் கொள்ளமுடியும். அதே நேரம் பாடம் கஷ்டமாக இருக்கிறது என்று தன்னை மாற்றிக் கொள்ள நினைக்காமல் பாடத்தின் மீது தவறு இருப்பதாக நினைத்தால் அதற்கான தீர்வினை மனம் தேடாது. நன்றாகப் படிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உங்கள் மனதிற்குப் புரிய வைக்கும் போது அதற்கான சாதனங்களை தானே தன் பால் ஈர்த்து விடும்.
உலகத்தையே வெற்றி கொள்ள நினைத்த மாவீரன் நெப்போலியன் கடைசியில் பிரிட்டனில் தோற்று ஆப்ரிக்காவில் தனிமை சிறை வைக்கப்பட்டார். சிறையில் அவரைப் பார்க்க வந்த நண்பர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்து, "இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும். தனிமையைப் போக்கும். இதைத் திறந்து விளையாடுங்கள்" என்று கூறிச் சென்றார்.
ஆனால் நெப்போலியனுக்கு அதன்மீது கவனம் போகவில்லை. நண்பர் அந்த அட்டையைக் கொடுக்கப் பிரத்யேகக் காரணம் இருக்குமா என்று சிந்திக்க முடியவில்லை. மன உளைச்சலிலேயே. இறந்து போனார்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் நெப்போலியனிடம் இருந்த அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்தபோது அதன் நடுவே சிறிய அளவில் குறிப்பு ஒன்று இருந்தது. அது சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கான வழி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பதட்டமும், மன உளைச்சலாலும் அவர் சிந்தனை செயல்படாமல் அந்த வழியை மூடிவிட்டது.
மாவீரனின் வெற்றிக்கதை மட்டுமல்ல தோல்விக் கதையும் நமக்கு ஒரு அனுபவ பாடம். நம் பிரச்னைகளுக்குத் தீர்வே இல்லை என முடிந்து போன ஒன்றாக நினைத்து செயலற்றுப் போகாமல், வேறு வழி தென்படலாம் என்று தள்ளி நின்று சிந்தித்தால் உன் தீர்வுக்கு வழி கிடைக்கும். பிரச்சனைக்கான தீர்வை அழுத்தம் இல்லாமல் நிதானமாக சிந்தித்தால் பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும். மகிழ்ச்சியும் நிரந்தரமாகத் தங்கும்.