-மரிய சாரா
நம்மில் பலர் இன்று வாழ்க்கையின் எதார்த்தத்தை உணராமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சந்தோஷமாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப்பதே நிறைவேறாத ஆசை தான். உயர்வு-தாழ்வு, இன்பம்-துன்பம் என மாறி மாறி அமையும் பல சுவாரஸ்யங்களால் நிறைந்ததுதான் நிறைவான மனித வாழ்க்கை. இதில் ஏதேனும் ஒன்று மட்டுமே கடைசிவரை இருக்குமானால் வாழ்க்கை வெறுப்பாக மாறிவிடும்.
பல சமயங்களில் நாம் நமக்கு பிடித்த பொருளை அல்லது நபரை வாழ்க்கையில் இழக்க நேரிடலாம். அப்படியான இழப்புகள் நேரும் சமையத்தில் தான் உலகமே இருண்டு போனது போல ஒரு வெறுமை நம் மனதில் தோன்றும். ஏன் இந்த வாழ்க்கை நமக்கு என தோன்றும். மிகச்சிறிய இழப்புகளைக்கூட தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் மனிதர்களை நாம் இன்றைய சூழலில் அதிகமாக பார்க்கிறோம்.
எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம் இருக்கும். சாதித்த அனைவரின் வாழ்விலும் ஒன்றோ அல்லது அதற்கும் மேற்பட்ட பெரிய இழப்புகள் நேர்ந்திருக்கும்.
இன்றும் பாரெங்கும் போற்றும் விஞ்ஞான உலகின் மேதை அய்யா டாக்டர். அப்துல்கலாம் அவர்களின் முயற்சிகளில் ஒன்றான SLV-3 1979-ம் ஆண்டு தோல்வியை சந்தித்தபோது அவர் துவண்டுவிடவில்லை. அதிலிருந்து மீண்டு வந்து அவர் முயன்றதால் தான் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவரானார். "Missile Man of India." என்ற பட்டத்துடன் இளம் தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளார்.
இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ரஜினிகாந்த் கூட பஸ் கண்டக்டர் ஆக இருந்தவர்தான். அவரின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை என்பது அவருக்கு மிகச்சிறிய வாய்ப்புகளை மட்டுமே தந்தது. சில வாய்ப்புகளை இழக்கவும் நேர்ந்தது. அனால் அவர் நின்று எதிர்கொண்டதால்தான் இன்றும் பல லட்சம் மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
இப்படி சாதித்த பலரை நாம் உதாரணமாக சொல்லிக்கொண்டே போகலாம். அவர்கள் எல்லோரது வாழ்விலும் இழப்புகள் இருந்திருக்கும். அப்படி அவர்கள் இழக்காமல் இருந்திருந்தால் இன்று அவர்கள் இந்த மிகப்பெரும் இடத்தில் இல்லாமல் அங்கேயே நின்று போய் இருந்திருக்கலாம்.
அந்த இழப்புகளை எல்லாம் மிகுந்த மன வலிமையுடன் கடந்து வந்ததால் இன்றும் அவர்களால் உயர்ந்து நிற்க முடிகிறது. ஒருவன் அனைத்தையும் இழந்து நிற்கின்ற அந்த ஒன்றுமில்லாத சூழல் தான் உண்மையான வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்ளும் அழகிய பாடசாலை. அந்த இடத்தில் கற்றுக்கொள்ள தவறும் மனிதன் தனது வாழ்வையே இழக்கிறான்.