Love and affection is bliss!
Motivational articles

அன்பும் பாசமும் ஆனந்தமே!

Published on

த்தனையோ பேர் சந்தர்ப்பவாத கயிறுகளைக் கொண்டு நம் கழுத்தை இறுக்கினாலும், சிலபேர் அப்படிச் செய்வதால் இந்த உலகமே அப்படிப்பட்டதுதான். இங்கு அன்புக்கு மரியாதையே இல்லை என்று சொல்லப்படும் பொதுக்கருத்தை நம்பிவிடாதே. என்று காதோரம் சொல்லிவிட்டுப் போகிற மனிதர்கள் அற்புதமானவர்கள்.

அவர்கள்தான் சக மனிதர்களின் மீதான பிரியத்தை, இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அட போப்பா! அன்பாவது, பாசமாவது என்று அலுத்துக்கொள்ளுகிற சமயங்களில் இந்த மனநிலை தற்காலிகமானதுதான் அன்பு மட்டுமே சாசுவதமானது என்பதை அந்த மனிதர்களே நினைவூட்டுகிறார்கள்.

சொந்தமெல்லாம் சும்மா. காசு இருந்தாதான் நம்ம கூட நாலுபேரு நட்பா இருப்பாங்க என்று அவநம்பிக்கையோடு சுருங்குகிறபோது, சூழ்நிலையின் நெருக்கடியில் துவண்டு போகிறபோது, தொடர்பிலேயே இல்லாத ஒரு தோழன், என்னடா பிரச்னை என்று தொலைபேசியில் அழைக்கிறபோது அந்த அவநம்பிக்கை செத்துப் போகிறது. இது அன்பின் உலகம் என்று மீண்டும் நம்பிக்கை துளிர்க்கிறது.

அன்பும், உறவுகளும் தோழமையும் பொய் யென்று முடிவுகட்டிவிட்டு ஒரு பெரும்கூட்டம்தன்னை சமூகத்தில் இருந்து துண்டித்துக்கொள்ள முனையும் போது அன்பின்பேரால் ஆயிரம் பிரச்னைகளை சந்தித்திருந்தாலும், அன்பே உலகம் என்பதை நம்பும் சில மனிதர்கள் நம்மைக் கடந்து போய்க்கொண்டேயிருக் கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
உங்கள் மகிழ்ச்சியை மனதில் ஏற்றுங்கள்!
Love and affection is bliss!

அவர்கள்தான் பேரன்போடு இந்த உலகத்தை வழிநடத்துகிறார்கள். அவர்களைப்போல இருக்க முடியாவிட்டாலும், அன்பின் மீதான அவநம்பிக்கையைத் தொலைத்துவிட்டு வாழ முயல்வதே ஆனந்தம்தான். அன்போடு வாழ முனைகிற மனிதர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தான் தனித்து விடப்பட்டதைப் போல நினைப்பதேயில்லை இந்த உலகத்தின் பேரன்பு, உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கையே அவர்களை மகிழ்வோடு பயணப்பட வைக்கிறது.

அன்பின் பெயரால் ஏமாற்றப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனதுக்குள் கோபத்தோடு, இந்த உலகமே இப்படித்தான் என்று சமூகத்தின்மீது வெறுப்போடு இருக்கிறவர்களைவிட, என்னமோ அப்படி நடந்து போச்சு :வேணும்னா செஞ்சிருப்பாங்க விடு' என்று சொல்லிவிட்டு அன்பின் மீதான காதல் சற்றும் குறையாமல் அடுத்த நிலைக்கு பயணிக்கிறவர்கள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறார்கள். 

சிலரின் பார்வைக்கு அவர்கள் ஞானிகள்போலத் தெரிந்தாலும், அன்பின் மீதான அவர்களின் நம்பிக்கை அவர்களுக்குள் ஓர் அக பலத்தை ஏற்படுத்துகிறது. 

அன்பை தீராப் பிரியத்தோடு நேசிக்கிறவர்களை தேடுங்கள். அவர்கள் நமக்கு தரப்படும் செய்தி அற்புதமானது.

logo
Kalki Online
kalkionline.com