
நீங்கள் எந்தத்துறையில் இருக்கிறீர்களோ, அந்தத்துறை சார்ந்த அனுபவமிக்கவர்களோடு, அத்துறையில் நல்ல அறிவு படைத்தவர்களோடு அடிக்கடி நல்ல நட்பை வளர்த்துக்கொள்வது நல்லது.
சிலபேர், ஒரே துறையைச் சேர்ந்தவர்களோடு பழகுவதையே தவிர்த்து வருவார்கள். காரணம் ஒருவகையான 'ஈகோ' தான். தனக்குத் தெரிந்ததை வாய் தவறி அவரிடம் சொல்லிவிட்டால், எங்கே அவர் அந்தத் துறையில் மேலும் பிரகாசித்து விடுவாரோ என்ற அச்சம் அவர்களுக்குள் நெருடிக்கொண்டே இருக்கும்.
ஆனால் இது தவறு இதுபோன்ற 'ஈகோ' உங்கள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, குறைத்துவிடுமே அல்லாமல் நீங்கள் நினைப்பதுபோல, மற்றவர்களை வளரவிடாது. இன்னும் ஒன்று, உங்கள் துறை பற்றிய உங்கள் அறிவு, ஞானம், திறன் குறைவாக இருந்தால் மட்டுமே உங்களிடம் தன்னம்பிக்கை குறைகிறது. அதனால்தான் இதுபோன்ற ஈகோ உங்களைப் பிடித்து ஆட்டுகிறது.
இதற்கு அனுபவமிக்கவர்களோடு உங்களது நட்புப் பாலம் பலமாக இல்லாமல் போனதே காரணம் என்ற உண்மையை உணருங்கள். அவர்களோடு பழகும்போது, உங்கள் அனுபவங்களை அவர்களுக்குச் சொல்கிறீர்கள். அதில் எந்தவிதமான தவறும் கிடையாது. ஏனென்றால் அவர்களின் அனுபவங்களையும் நீங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
உங்கள் அனுபவத்தைவிடவும் பல மடங்கு அரிய உண்மைகள் அவர்களின் அனுபவங்களில் இருந்து உங்களுக்குக் கிடைக்கக்கூடும். அது உங்கள் துறையில் இன்னும் பல அரிய சாதனைகளை நீங்கள் சாதிக்க உங்களுக்கு ஊக்கமளிக்கும். உங்களை மேலும் பலமுள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர் களாகவும் மாற்றும். அவர்கள் மூலமாகக் கற்றுக் கொண்ட விஷயங்களை உங்கள் துறையில் நீங்கள் செய்வதன் மூலம் கண்டிப்பாக மேலும் சில படிகளை விரைந்து கடக்க முடியும்.
ஈகோவை அளிக்கும் நீங்கள், சில பிடிவாத குணங்களை உங்களோடு வைத்துக்கொள்ளவும்.
வாழ்வில் வெற்றி பெறவேண்டும். அதாவது அனுபவமிக்கவர்கள் சொல்லும் தகவல்களை, விஷயங்களைச் செயல்படுத்தியே ஆகவேண்டும் என்பதை உங்கள் மனத்தில் நீங்கள் நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும்.
குழந்தைகள் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு தீக்குச்சியால் உரசி நெருப்போடு விளையாடும். அப்போது பெரியவர்கள் அவர்களை எச்சரிப்பார்கள். நெருப்பு சுடும் என்று கூறுவார்கள். ஆனால் குழந்தைகள் அதனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அப்புறம் அந்த நெருப்பு அவர்களின் உடையில் பிடித்து பற்றி எரிகிறபோதுதான் அவை நெருப்பு சுடும் என்பதை உணருகிறது.
நாமெல்லாம் குழந்தைகள் அல்ல. பெரியவர்கள். நெருப்பில் கையை வைத்துப் பார்த்துத்தான் நெருப்பு சுடும் என்பதை உணர்ந்துகொள்ளும் நிலையில் இல்லாத அறிவு வளர்ச்சி உடையவர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
அனுபவமிக்கவர்கள் விடுக்கும் எச்சரிக்கையைப் புரிந்துகொண்டு உங்களது செயல் திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இதில் ஈகோ பார்க்கத் தேவையில்லை. அதேபோல, அனுபவமிக்கவர்கள் கூறும் நல்ல விஷயங்களைக் காதில் போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப உங்கள் செயல்திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.