காலையில் எழுந்ததும் நீங்க என்ன பண்ணுவீங்க? கண்ணாடியை எப்போ பார்ப்பீங்க?
இந்த கேள்விக்குப் பல பேர் சொல்வது “தன்னை அலங்கரித்த பின்பே சரியாக இருக்கோமா இல்லையா என்பதை சரிப்பார்க்கவே பார்ப்போம்” என்பதாகும்.
நாளையில் இருந்து காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பாருங்கள். முகம் கழுவுவதற்கு முன்னால் எழுந்ததும் செய்யும் முதல்வேலையாக வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களை கண்ணாடியில் பார்த்து, “நான் உன்னைக் காதலிக்கிறேன். உன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேளுங்கள்.
முதலில் இப்படிச் சொல்ல கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். எனெனில் நமக்கே நாம் சொல்வதில் நம்பிக்கை இருக்காது.
நாமே நம்மை ஏற்றுக்கொள்ளாதபோது மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எப்படி தோன்றுகிறது. முதலில் நம்மைச் சுயமாக எந்த ஃபில்டரும் இல்லாமல் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முதலில் இது உங்களுக்குக் கடினமாக தோன்றினாலும் நாளடைவில் ஒரு நல்ல தொடர்பு உங்களுடனே உங்களுக்கு உருவாகும். அப்படி செய்வதால் ஒரு நல்ல மாற்றம் நமக்குள் ஏற்படும். அது ஒரு நல்ல உணர்வைத் தரும்.
நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள் சிறு குழந்தைகள் பிறந்த உடன் அவர்களுக்கு வெறுப்பு, கோபம், பொறாமை என்று எந்த குணமுமே மனதில் இருக்காது. தன்னை முழுமையாக மற்றவர்களிடம் காட்டிக்கொள்வார்கள். தன்னையும் மற்றவர்களையும் முழுமையாக நேசிப்பார்கள்.
ஏனெனில் அவர்களுக்கு தெரியாது ‘இப்படி இருந்தால்தான் அழகு, இதுதான் நம் தகுதியை உருவாக்குகிறது’ என்பது போன்ற அளவுகோல்கள்.
ஏதோ ஒரு கட்டத்தில் நமக்கு இந்த சமூகம் கற்றுத் தருகிறது. ‘இதுதான் அழகு, இதுதான் அறிவு. இப்படி இருந்தால்தான் இந்தச் சமூகத்தில் இடம் உண்டு. அவர்களால் மதிக்கப்படுவாய், இவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவாய்’ என்பது போன்ற எண்ணங்களை விதைக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள், அழகானவர்கள், அறிவானவர்கள் ஒவ்வொருவிதத்தில். மற்றவர்களிடம் இருப்பது நம்மிடம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நம்மிடமிருப்பது மற்றவர்களிடம் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.
அதனால் உங்களை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். தினமும் கண்ணாடியைப் பாருங்கள். அது உங்களுக்கு கற்றுத் தரும் எப்படி நம்மை நாமே காதல் செய்வதென்று.