‘கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லிக் கேட்டு இருப்போம். இது ஒரு விதத்தில் உண்மைதான்.
சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை. பணம் வைத்து இருப்பது தவறு இல்லை. ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை வைத்து இருப்பதுதான் தவறு. பணத்துக்கு அதிக முக்கியம் கொடுக்கும்போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படலாம். உறவுகளின் விரிசல் நட்பில் விரிசல் என பணத்தின் பின்னால் ஓடினால் ஒரு காலகட்டத்தில் நாம் தனிமைப் படுத்தப்பட்டு விடுவோம்.
“பணம்தான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியம். ஒருவேளை பணத்தை வைத்து எந்த பொருளையும் வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற நிலை வந்து விட்டால், எல்லாரும் குழம்பிப் போய் விடுவார்கள். ஒரே மாதத்தில் போரே வெடிக்கும்.”
இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பணத்தை வைத்துக் கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம். ஆரோக்கியத்தை வாங்க முடியாது. மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியாது.
புத்தகத்தை வாங்கலாம். புத்தியை வாங்க முடியாது. நகையை வாங்கலாம். அழகை வாங்க முடியாது. ஆடம்பரத்தை வாங்கலாம். அன்பை வாங்க முடியாது. கூட்டத்தை வாங்கலாம், நண்பர்களை வாங்க முடியாது.
வேலைக்காரர்களை வாங்கலாம், விசுவாசத்தை வாங்க முடியாது என்று நார்வே நாட்டு கவிஞர் அர்னா கர்பார்க் சொல்லி உள்ளார்.
வாழ்வதற்குப் பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வார்.
பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக் கொண்டு இருக்கிறார்கள்”.
பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக எண்ணி, பணமே குறிக்கோள் என்று எண்ணி வாழ்பவர்களுடன் பழகாதீர்கள்.
பணத்தை விட நல்ல குணங்களைப் பெரிதாக மதிப்பவர்களோடு பழகுங்கள்.
சிலர் சொல்வார்கள் அவன் புது பணக்காரன் அவனிடம் பணம் வந்துவிட்டது அதனால் அவன் யாரையும் மதிப்பதில்லை. என்று ஆனால் சிலர் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய கேட்டை விளைவிக்கும் என்பது இப்போது தெரியாது.
பணம் என்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமானதுதான். ஆனால் அதுவே வாழ்க்கை என்று அதன் பின்னாலே ஓடாதீர்கள். இருப்பதை வைத்து மகிழ்ச்சியோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள். அதுவே ஆரோக்கியமான வாழ்க்கை.