பலருக்கும் வெற்றி பெறவேண்டும் என்பது கனவு. ஆனால் அதற்கான முழு உழைப்பை நாம் தருகிறோமா என்றால் அது நிச்சயம் இல்லை என்று பதில்தான் வரும்.
"நாம் நம்மிடம் இருக்கும் சக்தியில் மிகச்சிறிய பங்கைதான் உபயோகித்து வருகிறோம். நம்மிடம் இருக்கும் சக்தியை முழுக்க பயன்படுத்திக் கொண்டு உழைக்க ஆரம்பித்தால் நம்முடைய செல்வம் சந்தோஷம் புகழ் ஆரோக்கியம் போன்றவைர்கள் பல மடங்குகளாக பெருகிவிடுவதை நாம் காண முடியும்" என்று ஜே வி ஷெர்னி (J. V. Cerney) என்ற அறிஞர் கூறியுள்ளார்.
மற்றொரு அறிஞரான எமர்சன் (Emerson) என்பவர் ஒரு சதவிகிதம் ஊக்கம், 99% வியர்வை ஆகிய இரண்டும் சேரும்போதுதான் ஒரு அறிஞன் பிறக்கிறான் என்று கூறியுள்ளார்.
நமக்கு ஏதாவது தேவை என்றால் அது கிடைக்கும் வரையில் அதன் பின் செல்லும் பழக்கத்தை கொள்ள வேண்டும். ஒரு காகிதத்தை சூரிய வெளிச்சத்தில் சாதாரணமாக வைக்கும்போது அந்த காகிதத்திற்கு எதுவும் ஏற்படுவதில்லை. அதுவே ஒரு பூதக் கண்ணாடியின் உதவி கொண்டு சூரியனுடைய ஒளிக்கதிர்களை ஒரே இடத்தில் குவிக்கும்போது அந்த காகிதம் சூரியனின் வெப்பத்தால் பற்றி எரிய ஆரம்பிக்கிறது.
அதேபோன்று நம்மிடம் இருக்கும் சக்தியை பரவலாக பல காரியங்களை செய்ய நாம் பயன்படுத்தினால் நம்மால் சிறிய காரியம் உட்பட எதையும் உருப்படியாக சரிவர செய்ய முடியாது. நம்முடைய சக்தி அனைத்தையும் திரட்டி நாம் ஒரு ஒரே காரியத்தில் கவனம் வைத்து அதை செய்து முடிக்க முயற்சி செய்யும்போது அந்த காரியத்தை விரைவாகவும், சுலபமாகவும் நம்மால் செய்து முடிக்க முடிகிறது.
நாம் போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் மற்றவர்களை விட எப்போதும் திறமைகளை வளர்த்து முன்னால் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்கள் உங்களை பின்னுக்குத் தள்ள அனுமதிக்க கூடாது. அப்படி பின்னுக்கு தள்ளப்பட்டால் உங்களால் மீண்டும் முன்னுக்கு வர முடியாமல் தேங்கிவிடும் சூழல் ஏற்பட்டு போய்விடும்.
மிகவும் கடினமாக பாடுபட்டு உழைப்பவர்களுக்கு தான் வாழ்க்கையில் வெற்றி, புகழ், செல்வம், உயர் பதவி போன்றவைகள் கிட்டும் என்பது இறைவன் வகுத்த வாழ்க்கை முறையாகும்.
"அதிர்ஷ்டம் என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது நான் எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிக அளவில் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்து வருவதை நான் கண்டிருக்கிறேன்" என்று கால்பந்து வீரர் கோல்மன் காய் (Coleman Coy) கூறியுள்ளார்.
ஷேக்ஸ்பியர் உழைப்பு குறித்து இப்படி சொல்லி இருக்கிறார் "நீந்துங்கள் அல்லது முழுகுங்கள்". ஆம் கடினமான உழைப்பின் துணைக் கொண்டு உங்களை பணக்காரனாக உயர்த்திக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கலாம் அல்லது சோம்பேறித்தனமாக வாழ்ந்து ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கி முகவரியற்று வாழ்க்கைக் கடலில் மூழ்கி விடுங்கள். மூழ்குவதற்கா நாம் பிறந்தோம்?
"மற்றவர்கள் உங்களுக்கு உற்சாகம் கொடுத்து உங்களை ஊக்குவிக்க போறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் ஏமாறத்தான் வேண்டியிருக்கும். சோர்வை கண்ட சமயங்களில் நமக்கு நாமே உற்சாகம் கொடுத்து தொடர்ந்து நமது உழைப்பை நம்பி உழைத்தால்தான் வெற்றி வீரராக நம்மை உயர்த்திக் கொள்ள முடியும்".
சுலபமான வெற்றி என்று எதுவும் இந்த உலகத்தில் கிடையாது. வெற்றி பெறுவதற்கு உழைப்புடன் கூடிய விடாமுயற்சியை விட சிறந்த வழி எதுவும் கிடையாது. மற்றவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது உங்கள் வேலையல்ல. உங்களுக்கு தேவையானவைகளை அடையும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள். உழைப்பை மூலதனமாக்கி செயலில் இறங்குபவர்கள் என்றும் தோல்வி கண்டதில்லை என்பது மட்டும் உறுதி.