நம்பிக்கை என்பது புயல் அடிக்கும் கடலில் கப்பலை வழி நடத்தும் கலங்கரை விளக்கைப் போன்றது. வாழ்க்கைப் பயணத்தில் சவால்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளில் கூட நம்பிக்கை ஒருவரை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக செயல்படுகிறது. நம்பிக்கை ஒருவரது வெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்படி வித்திடுகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. உந்துதல்; (Motivation)
நம்பிக்கை ஒரு மனிதனின் மனதிற்குள் உந்துதலின் தீப்பொறியை பற்ற வைக்கிறது. நம்பிக்கை இருக்கும் போது முயற்சிகள் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த நம்பிக்கையே செயல்பட தூண்டி, இலக்குகளை நோக்கி இயக்குகிறது.
2. கேடயம்;
நம்பிக்கை விரக்திக்கு எதிரான ஒரு கேடயம் போல செயல்படுகிறது. துன்பமான நேரங்களில் நம்பிக்கையுள்ள மனிதர்கள் பின்னடைவுகளில் இருந்து எளிதாக மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் சிரமங்களை தற்காலிக தடைகளாக மட்டுமே பார்க்கிறார்கள் அவற்றை கடக்க முடியாத அல்லது மீள முடியாத தடைகள் என்று நினைப்பதில்லை.
3. நேர்மறை எண்ணங்கள்;
நம்பிக்கை எப்போதும் நேர்மறை எண்ணங்களையே தருகின்றது. இவை இரண்டும் பெரும்பாலும் கைகோர்த்து செயல்படுகின்றன. நம்பிக்கை உள்ள நபர்கள் எதிலும் நேர்மறைத்தன்மையை மட்டுமே காண்கிறார்கள். அதனால் அவர்களுக்கு வாய்ப்புகளை ஈர்க்கும் சக்தியும் வெற்றிக்கான கதவுகளை திறக்கும் மந்திரமும் தெரியும்.
4. விடாமுயற்சி;
நம்பிக்கை உள்ள நபர்கள் சவால்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருப்பார்கள். தங்களுக்கு எதிராக மனிதர்களோ அல்லது சூழ்நிலையோ செயல்படும் போது கூட தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். நீண்ட கால வெற்றியை அடைவதற்கு இந்த விடாமுயற்சி மிக முக்கியம்
5. சிக்கல் தீர்க்கும் தன்மை;
நம்பிக்கை படைப்பாற்றல் மற்றும் வளத்தை வளர்க்கிறது. சிரமங்கள் மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது அவர்கள் மாற்று வழிகளை ஆராய்ந்து அவற்றின் வழியே முயற்சி செய்கிறார்கள். இந்த அணுகுமுறை தடைகளை கடக்கவும் நோக்கங்களை அடையவும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
6. உணர்ச்சி நல்வாழ்வு;
நம்பிக்கையானது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைப்பதன் மூலம் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இது சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. மன அழுத்தம் இன்றி செயல்படுவதால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கவும் வாழ்க்கையை நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கவும் உதவுகிறது.
7. உறவு மேலாண்மை;
நம்பிக்கை சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தி ஒத்துழைப்பை வளர்க்கிறது. நம்பிக்கை உணர்வையும் அதன் தன்மையையும் மக்கள் புரிந்து கொள்ளும் போதும் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் போதும் ஒருவரை ஒருவர் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் தொடங்குகிறார்கள். இது ஒருவரின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வெற்றியை மேம்படுத்தும் ஒரு ஆதரவான நெட்வொர்க்கை உருவாக்குகிறது.
8. பெரிய கனவுகளை நனவாக்குகிறது;
நம்பிக்கை ஒருவரின் பார்வையை விசாலமாக்கி பெரிய இலக்குகளை அமைக்க வைக்கிறது. அவர்களின் கனவை நனவாக்கவும் செய்கிறது. அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை கற்பனை செய்ய ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான செயல் வடிவத்தையும் அவர்களுக்கு எளிதாக்குகிறது.
9. நெகிழ்வுத்தன்மை;
தங்கள் முயற்சிகளில் அவ்வப்போது தோல்விகள் வந்தாலும், சோர்ந்து போகாமல் மனதை திடமாக வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நிச்சயமற்ற தன்மையை வழிநடத்துவதில் திறமையானவர்களாக திகழ்கிறார்கள். கடினமான சூழ்நிலைகளில் கூட தங்களது நம்பிக்கையின் பலத்தால் திட்டங்களையும் உத்திகளையும் சரி செய்யும் நெகிழ்வுத் தன்மையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். இதனால் புதிய வாய்ப்புகளைப் பெறவும் மாறுபட்ட சூழல்களில் செழித்து வளரவும் வெற்றி பெறவும் அவர்களால் முடிகிறது.
10. நல்வாழ்வு;
நம்பிக்கையுள்ள ஒரு மனிதனின் உடல்நலமும் மனநலமும் காக்கப்படுகிறது. அவரது நல்வாழ்வுக்கான பாதையை அவரே அமைக்கிறார். நம்பிக்கையான மனிதர்களுக்கு குறைந்த அளவு மன அழுத்தமும் மனச்சோர்வும் பதட்டமும் மட்டுமே இருக்கும் அவற்றையும் மிக எளிதாக கையாண்டு ஆரோக்கியமான மனதை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
மொத்தத்தில் நம்பிக்கை எனும் ஆகச்சிறந்த கருவி ஒரு மனிதனை வெற்றியாளராக மட்டுமல்லாமல் மகிழ்ச்சியானவராக, நிம்மதியானவராகவும் வைக்கிறது.