இந்தக் கேள்விக்குப் பதில் என்ன தெரியுமா?
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி அவர்தான். அவருக்கென்று எந்தப் பொறுப்பும் கிடையாது. ஆனால் ஜனாதிபதிக்கு நிகரான வாழ்க்கை வசதிகள் உண்டு. ஜனாதிபதி இறந்தால் மட்டுமே அவரது இயக்கம் ஆரம்பமாகும். எந்த வேலைப்பளுவும் இல்லாத இந்த உதவி, துணை என்கிற பதவிகளை சிலர் விரும்புவார்கள். காரணம் முதலாவதாக இருப்பதில் பெருமை இருக்கிற அளவுக்கு பொறுப்பு, பாரம், துன்பம், விமர்சனம் போன்றவைகளும் உண்டு. ஆனால் நம்பர் 2வாக இருப்பதில் சுகமும் போகமும் மட்டுமே உண்டு.
ஆனால் நீங்கள் இந்த நம்பர் 2 வாக இருந்து திருப்தி அடைவதில் வாழ்க்கை அல்ல. நம்பர் 1 ன்னாகவே இருக்க ஆசைப்படுங்கள். சிலர் எங்கு சென்றாலும் முதல் வரிசையில் அமர விருப்பப்படுவார்கள். எல்லோருக்கும் முதல் வரிசை கிடைக்குமா?. பேரறிஞர் அண்ணாவிற்குப் பின் சீனியாரிட்டி பார்த்தால் கலைஞர் திமுக தலைவராகவும், முதல்வராகவும் ஆகியிருக்க முடியாது. அமரர் எம் ஜி ஆருக்குப் பின் செல்வி ஜெயலலிதா அவர்கள் சீனியாரிட்டிகளைப் புறக்கணித்து நம்பர் ஒன் ஆனார். அவர் நம்பர் 2வாக இருக்க விரும்பியதே இல்லை. நம்பர் 2 பாதுகாப்பானது. ஆனால் ஆபத்துகளையும் விமர்சனங்களையும் எதிர் கொள்ளும் நபரே நம்பர் 1 இடம் பெறுகிறார்கள்.
சைவ சமயத்தில் இறைவனைக் குறித்து பாடிய நாயன்மார்கள் பாடலை நம்பியாண்டார் நம்பி என்பவர் வரிசைப் படுத்தி முறைப்படுத்தினார். காலத்தால் பிந்திய வயதில் சிறியவரான திருஞானசம்பந்தர் பாடல்களைதான் முதல் திருமுறை என அறிவித்தார். சைவ சமய தலைவர்களை வரிசை படுத்தும்போது முதலில் திருஞானசம்பந்தர் என்றே வரிசை படுத்துவார்கள்.
ஏன்? சைவ சமயத்துக்கு பிற சமயங்களால் துன்பம் நேர்ந்தபோது அஞ்சாமல் தலைமை ஏற்றவர் ஞானசம்பந்தர். பாண்டிய நாட்டில் திருநீறு வைத்தாலே தீட்டு என்று அரசருக்கு அஞ்சி மக்கள் திருநீறு வைக்காதபோது திருநீற்றுப் பதிகம் பாடி மன்னருக்கே திருநீறு கொடுததவர் அவர். எனவே நம்பர் 1 பட்டம் அவரைத் தேடி வந்தது. நம்பர்2 இல் சௌகரியங்கள் அதிகம். நம்பர் 1 இல் சங்கடங்கள் அதிகம். என்றாலும் உங்கள் லட்சியம் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும். நம்பர் 1 ஆக தகுதி உழைப்பு தியாகம் தலைமைப் பண்புகள் வேண்டும்.
மகாபாரதத்தில் வியாசர் ஒரு அருமையான விளக்கம் கூறுகிறார். நான்கு வர்ணங்களில் அந்தணரில் அறிவு அதிகம் உடையவனே பெரியவன். அரசரில் பலம் அதிகம் உடையவனே பெரியவன். வணிகரில் பணம் அதிகம் உடையவனே பெரியவன். நாலாம் வர்ணத்தில் வயதில் மூத்தவனே பெரியவன் என்கிறார். காலம் மாறிவிட்டது என்றாலும் வியாசரின் அணுகுமுறை ஆழ்ந்த அறிவு மாற முடியாது.
உங்கள் ஆசிரியரை விட அதிகம் நீங்கள் படித்திருந்தால் நீங்கள் நம்பர் ஒன். உங்களைச் சுற்றியுள்ளவர்களைவிட உங்கள் பணபலம் பெருகிவிட்டால் நீங்கள் நம்பர் ஒன். வயதில் மூத்தவர்களை நீங்கள் மரியாதையுடன் நடத்தினால் நீங்கள் நம்பர் ஒன். சௌகரியம் கருதி நம்பர் டூ ஆக வேண்டாம். சங்கடம் வந்தாலும் நம்பர் ஒன் ஆவதுதான் லட்சியம். இந்த லட்சியம் இருந்தால் வெற்றி நிச்சயம்.