அன்பான நேசிப்பில் மறையும் குறைகள்!
சாதாரணமாக குறைகளை எப்பொழுது சொல்லுகிறோம் என்று பார்த்தால் ஒருவரின் மீது அன்பு, பாசம், நேசிப்பது இதெல்லாம் குறையும் பொழுதுதான் குறை, குற்றம் என்று பார்க்க ஆரம்பிக்கிறோம். அதை போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
'வெட்டி வேறு வாசம் விடலை பிள்ளை நேசம்' என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் இந்தக் குட்டிக் கதைதான் எனக்கு ஞாபகத்திற்கு வரும். ஒரு வீட்டில் சதா கணவன், மனைவிக்குள் சண்டை வரும். பிறகு சமாதானமாகி விடுவார்கள். இது தினசரி நடக்கும் செயல்.
ஒருமுறை இருவருக்கும் வாக்குவாதம் வரவே வழியில் துறவியைக் கண்ட கணவன் "என் மனைவி நிறைய குறைகளோடு இருக்கிறாள். அவளை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. எது பேசினாலும் எதிர்த்து வாதாடுகிறாள். அவளோடு இனி என்னால் வாழ முடியாது. நான் அவளை விட்டு விலகி விடட்டுமா?"
அவனுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி, தம்பி இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்குத் தர விரும்புகிறேன். எது வேண்டும் கேள் என்றார்.
அந்தத் தம்பி ரோஜா செடியைக் கேட்டான். "அதைப் பராமரிப்பது மிகவும் கடினம். நிறைய முட்கள் வேறு இருக்கிறதே. இதுவா வேண்டும்?" என்றார் துறவி.
"எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும். அதனால் அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது" என்றான்.
புன்னகைத்த துறவி சொன்னார், "வாழ்க்கையும் அப்படித்தான் பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால் அவர்களது குறைகள் பெரிதாகத் தெரியாது".
அவனுக்குப் பொட்டில் அடித்தார் போல் இருந்தது. வீடு திரும்பினான். அதற்கு அடுத்த நாளிலிருந்து மனைவியை அலட்சியம் செய்யாமல் அமைதியாக வேலை விடுவதையும், அரவணைப்பாக பேசுவதையும் செயல்படுத்தினான்.
மனைவி எந்த எதிர்ப்பேச்சும் இல்லாமல் அமைதியாக அவன் சொல்லும் வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். அப்பொழுது தான் அவனால் குற்றம் யாரிடம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. தினந்தோறும் ரோஜாவை பறிக்கும் பொழுது முற்களை தொடாமல் பறித்து மனைவியிடம் நேசக்கரம் நீட்டினான். அதில் குறைகள் காணாமல் போயிருந்தது. மலர்ந்த புன்னகையில் ஒரு நேசம் தெரிந்தது. அதுதான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டார்கள்.
உங்களை நேசிப்பதைப் போலவே உடன் இருப்போரையும் நேசியுங்கள்!