கடின உழைப்பு இல்லாமல் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறாது.. சிலருக்கு உழைப்பக்குண்டான பலன் உடனே கிடைக்கும். சிலருக்கு தாமதமாகலாம்.
சிலர் வருத்தப்படுவதை கேட்டிருக்கிறோம் "கஷ்டப்பட்டு வேலை செய்றேன் ஆனா வாழ்க்கையில முன்னேற்றம் இல்லை அதிர்ஷ்டம் இல்லை" இப்படி குறைபட்டுக் கொள்வார்கள்.
ஒரு விதை போட்டால் ஒரே நாளில் மரமாகி காய் கனி தந்து விடுகிறதா என்ன? எவ்வளவு தூரம் அதை பாதுகாத்து பேணுகிறோமோ அப்போதுதான் அந்த பலன் நமக்கு கிடைக்கிறது.
நம் கனவு எப்போதும் பெரியதாக இருக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்பதில் ஒரு உறுதியான மனம் இருக்க வேண்டும். கனவு கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் போராட வேண்டும். நேர்மறையாக என்றுமே எப்போதுமே எந்த காரியத்தை தொடங்கினாலும் அது நடக்கும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.
வாழ்க்கை ஓர் நெடும்பயணம். நம் குறிக்கோளை அடைய லட்சியத்தைத் தொட ஒரே வழி அந்த பாதையை நோக்கி உழைக்க வேண்டும். சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது .கடினமான உழைப்பாளி, “என் பிள்ளைகள் என்னிடம் இவ்வளவு உழைக்கிறீர்களே அதற்குண்டான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று கேட்கிறார்கள் என் லட்சியம் இந்த வேலையில் எனக்கு முன்னேற்றம் தேவை அதற்காக உழைக்கிறேன். மற்றபடி அதிர்ஷடம் மட்டும் போதுமா என்ன? நான் வேலையில் நேர்மையாக இருக்கிறேன். எனக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்க தாமதம் ஆகிறது. அதுதான் அதிர்ஷ்டம் என்றால் அது காலத்தின் கையில் இருக்கிறது என்று பலனை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன்.."என்றார்.
சிலர் கடின உழைப்பு செய்தாலும் பலன் கிடைக்காமல் போகலாம். அதற்கு அதிர்ஷ்டம் இல்லை என்று சோர்ந்து போய் விடுகிறார்கள். சோர்ந்து போன மனதை உத்வேகப்படுத்தி நம்மை நாமே உற்சாகப்படுத்தி நமக்குள் இருக்கும் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை ஆராய்ந்து பலவீனத்தை போக்க வழிகளை கண்டறிந்து அதை களைந்து தூக்கி எறிந்து வெற்றியை நோக்கி நகர்ந்து செல்ல நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.
எல்லோருக்கும் ஆசை லட்சியம் இருக்கிறது. அதை செயல்படுத்தும் விதத்தில் வேறுபடுகிறார்கள். எந்த ஒரு வெற்றி பெற்ற மனிதனின் வாழ்க்கை பாதையை ஆராய்ந்தாலும் கண்டிப்பாக கடின உழைப்பு மூலதனமாக இருக்கும். அந்த உழைப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதில்தான் இருக்கிறது வெற்றி.
கடின உழைப்புடன் கூட நேர்மறை சிந்தனையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்.