பிரச்னைகளை, சவால்களை இரண்டு வகைகளாக மட்டுமே எதிர்கொள்ள முடியும். எப்படி?.
ஒன்று fight மற்றொன்று flight. அதாவது எதிர்ப்பது ஒருவகை. எகிறிக்குதித்து தப்பி ஓடுவது மறுவகை. நீங்கள் எந்த வகை யோசித்தது உண்டா. இந்த சவால்களை சந்தித்து, முறியடிப்பது மூலமே நாம் ஜீவிக்கிறோம். எனவே எகிறிகுதித்தோடும் கோழைத்தனத்தைவிட எதிர்த்துப் போராடும் துணிவும், தெளிவுமே நம்மை வாழ வைக்கிறது. அதற்காக அசட்டுத்தனம் ஆக எதிர்த்துப் போராடும் மூர்கத்தனம் கூடாது.
ஆனால் வாழ்வில் சவால்களைச் சம்மதத்துடன் ஏற்கும் கம்பீரம் நமக்கு வேண்டும். எழுபது எண்பது வயது வரை உயிர் வாழ்ந்தால் கூடச் சிலர் முப்பது நாற்பது வயதிலேயே செத்துப் போனவர்கள்.! எப்படி? சவால்களை எதிர்கொள்ள மறுக்கும் அந்தக் கணமே மனிதன் செய்துவிட்டதாக அர்த்தம். இதையே பெர்னார்ட் ஷா, "சில மனிதர்கள் இறப்பிற்கும் புதைப்பதற்கும் மத்தியில் முப்பது நாற்பது வருடங்களாக கடந்து விடுகின்றன." என்று கேலி செய்கிறார்.
வாழ்விலிருந்து விலகி ஓடும் மனிதர்களை விட எதிர்த்து நின்று போராடும் மனிதர்கள்தான் உன்னதமான இடம் பெறுகிறார்கள். அடிமை இந்தியாவில் அடிமைத்தனத்தை நிராகரித்து, எதிர்த்து நின்ற மகாத்மா காந்தியைத்தான் ஐநூறு ரூபாய் நோட்டில் அச்சடித்துக் கொண்டாடுகிறோம். கோழைகளை அல்ல.
வெள்ளையரை விரட்ட கப்பலையும்,விமானத்தையும் கையாண்ட வ.உ.சி.யையும், நேதாஜியை சிலை வைத்துச் சிறப்பிக்கிறோம். எனவே வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள். வெற்றி நிச்சயம்.
பிரச்னைகளில் இருந்து அர்ச்சுனன் தப்பியோட நினைக்கும் போதுதான் பகவத் கீதையே பிறந்தது. அவனை கிருஷ்ணர் தப்பி ஓட அனுமதிக்கவில்லை. ஒன்று புரிந்து கொள்ளுங்கள். சந்திக்கப் படவேண்டிய சவால்களை அடையாளம் காண்பதும், அவற்றைத் துணிவுடன் எதிர்கொள்ளத் தீர்மானிப்பதும் வெற்றிப் பாதையின் பாதி தூரம். ஜெயித்தல் என்பது மீதி தூரமே.
பண்ணையார் ஒருவர் ஏழை விவசாயிக்குக் கடன் கொடுத்தார். பண்ணையாருக்கு விவசாயியின் அழகான பெண் மீது ஒரு கண். அவளை அடைய சூழ்ச்சி செய்து விவசாயியின் கடனைக் கொடு அல்லது பெண்ணை எனக்குக் கொடு என்று நச்சரித்தார்.
மாரியம்மன் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்போம் என்றார். விவசாயி மகளுக்குப் பண்ணையார் வஞ்சனை புரிந்தது. அவர் இரண்டு சீட்டும் திருமணம் செய்யவேண்டும் என்றுதான் எழுதுவார். கோவிலில் ஊரே திரண்டது பண்ணையார் சீட்டைக் குலுக்கிக் போட ஒரு சீட்டை லபக்கென்று விவசாயியின் மகள் சாப்பிட்டு விட்டாள். அடடா அந்த சீட்டில் என்ன எழுதியிருந்தது என்பதை எப்படி கண்டு பிடிப்பது என்று ஊர்ப் பஞ்சாயத்து கேட்டது. "இதிலென்ன கஷ்டம் அந்த இன்னொரு சீட்டைப் பாருங்கள். நான் எடுத்த சீட்டு அதற்கு எதிரானது" என்றாள் அந்த புத்திசாலிப் பெண்.
பண்ணையாருக்கு அசடு வழிந்தது. இன்னொரு சீட்டில் திருமணம் செய்து கொள் என்று வந்ததால் முதல் சீட்டு திருமணம் வேண்டாம் என்று ஊர் முடிவு செய்தது. சவாலை நாம் சந்திப்பது என்று முடிவு செய்து விட்டால் எப்படிச் சந்திப்பது என்கிற முறை நிறைய தோன்றும்.இந்த வீரர்களுக்கு வெற்றி நிச்சயம்.