எவ்வளவு திட்டமிட்டு செயல்பட்டாலும், மறதி கடைசி நேரத்தில் திண்டாட வைக்கும் என்பதை விளக்கும் உண்மை நிகழ்வு.
மும்பையில் அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அன்று அவர்கள் நால்வரும் வேறு ஊருக்கு செல்லப் போகிறார்கள். அவருக்கு மாற்றல் ஆகிவிட்டது. முந்தின தினம் அவர்கள் பொருட்களை அனுப்பிவிட்டனர். இன்று காலை அவர்கள் விமானம் மூலம் செல்லப்போகிறார்கள். காலையில் நால்வரும் அடுத்த பிளாட்டில் குடியிருப்பவர் களுக்கு நன்றி செலுத்திவிட்டு விடைபெற சென்றனர். அவர்கள் வீட்டிலும் நால்வர். கணவர், மனைவி, பையன், பெண். இவர்கள் போல. இரண்டு குடும்பத்தாரும் நன்றாக பழகியவர்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துக் கொள்வார்கள்.
அவர்களுக்கு வாங்கியிருந்த பரிசு பொருளை கொடுத்து விடை பெற்றுக் கொள்ளும் பொழுது அடுத்த பிளாட் காரர் விசாரித்தார்,
"எப்பொழுது டாக்ஸி வரும், ஏர்போர்ட் செல்ல. எல்லாம் ரெடி தானே," என்று, மேலும் கூறினார், "உங்கள் பிளாட் சாவிகளை பூட்டி என்னிடம் கொடுங்கள், உங்கள் அலுவலகத்தில் கொடுத்து விடுகிறேன்," என்று (அது அவர் அலுவலகத்தில் அல்லாட் செய்த குடியிருப்பு).
அப்பொழுதுதான் உரைத்தது ஊருக்கு செல்ல வேண்டியவருக்கு. இவர்கள் வீட்டிற்கு கூற வந்த அவசரத்தில் மறதியாக அவர் பிளாட்டின் கதவை இழுத்து சாத்திக் கொண்டு வந்துவிட்டார். ஆட்டோமேட்டிக் லாக் சிஸ்டம் அது. கதவு மூடிக்கொண்டு விட்டது. உள்ளே இரண்டு சூட் கேஸ்கள், லேப் டாப், விமான டிக்கெட்டுக்கள், பர்ஸ், பணம், பாஸ்போர்ட்டுக்கள்,
க்ரெடிட், ஏ டி எம் கார்டுகள், சாவி கொத்துக்கள் இவை அனைத்தும் இருந்தன. ஊருக்கு கிளம்ப வேண்டும்.
பதற்றம் தொற்றிக் கொண்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. இலவச அட்வைஸ்கள் வந்தன, கதவின் பூட்டை உடைக்கலாம் என்பது உட்பட. இவருக்கு வேர்க்க ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது எதிர் பிளாட்டில் இருந்த ஒருவர் யோசனை கூறினார். "பதட்டப் பட வேண்டாம். எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு கட்டாயம் உண்டு. ஒன்று செய்யுங்கள் அடுத்த தெரு முனையில் ஒருவர் குடை ரிப்பேர் செய்கிறார். கூடவே சாவிகள் தயாரித்தும் கொடுக்கிறார். அவரை அழைத்து வந்தால் பிரச்சனைக்கு முடிவு கிட்டும், "என்று.
இவரது பையனை அனுப்பி அழைத்து வர சொனார்கள். அவர் பையனுக்கு மராத்தி மொழி சரளமாக பேச, படிக்க, எழுத தெரியும். சிறிது நேரத்தில் அவர் பையன் வந்தான். அவன் உடன் வந்தவன் சிறிய பையன். அவனால் என்ன செய்ய முடியும் என்று திகைத்தார், சம்பந்தப்பட்டவர்.
வந்த பையன் கதவை பார்த்தான். அங்கு இருந்த அவர் மனைவியிடம் ஒரு கொண்டை ஊசி வாங்கிக்கொண்டு,
அதை வளைத்து கதவின் சாவி துவாரத்தில் நுழைத்து லகுவாக ஒரு சுற்று சுற்றி கதவை திறந்துவிட்டான், பூட்டு எதையும் உடைக்காமல். இந்த வேலைக்கு அவன் வாங்கிக் கொண்ட கூலி அதிகம்தான். இருந்தாலும் அப்பொழுதைய தேவைக்கு அவன் செய்தது பெரிய ரிலீப் அளித்தது.
அவருக்குபோன உயிர் திரும்பி வந்த உணர்வை அளித்தது, திறந்த கதவை பார்த்ததும். அந்த நபர் படிப்பில் கல்லூரியில் தங்கபதக்கம் பெற்றவர். நல்ல வேலையில் அதிகாரியாக பணிபுரிந்துக் கொண்டு இருந்தார். ஆனாலும் இந்த அத்தியாவசியமான பிரச்சனைக்கு தீர்வுக்காண பெரிதும் உதவியது அந்த சிறிய பையனின் திறமை மட்டும்தான். (skill helped)