உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது.
லாண்ட் லைனில் கருப்பு நிற டெலிபோனின் மணி அடிக்கும் சப்தம் கேட்டது.
அந்த கால கட்டத்தில் டெலிபோனே அரிது. அது வீட்டில் இருந்தால் Luxury.
பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவன் மட்டும் அந்த அறையில் இருந்தான் அப்பொழுது.
அவன் அப்பா (ரொம்ப ஸ்ட்ரிக்ட் பேர்வழி) குளித்துக் கொண்டு இருந்தார். எனவே இவனை டெலிபோனை எடுத்து பேச சொன்னார்.
இவனுக்கோ மகிழ்ச்சி. தாவி எடுத்தான்.
அவன் அப்பாவிற்கு பதவி உயர்வு வந்து அவரது ஆஃபிஸில் இருந்து கொடுத்த போன் அது. அக்கம் பக்கம் வீடுகளில் NO டெலிபோன்.
அந்த கருப்பு நிற டெலிபோன் வந்த அன்றே இவர்களுடைய அப்பா கண்டிஷன் ஆக கூறிவிட்டார், யாரும் அந்த டெலிபோனை தொடக்கூடாது என்று.
எனவே இவன் அக்கா, தம்பி, தங்கை மற்றும் இவனுக்கும் 144 தடை... தொடுவதற்கு, எடுத்துப் பேசுவதற்கு.
ஆனால் காலேஜில் படிக்கும் பெரிய அண்ணனுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை.
இவர்கள் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக் கொண்டனர்.
இவர்களுக்கு எரிச்சல் ஊட்டும் நிகழ்வுகள் நடந்து ஏறின, அந்த கருப்பு டெலிபோனால்.
அக்கம், பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் ரைட் ராயலாக இவர்கள் வீட்டு டெலிபோன் நம்பரை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு வாரி வழங்கி விட்டனர்.
தினமும் அவர்களுக்கு வரும் டெலிபோன் கால்களுக்கு அவரவர் வீட்டுக்கு சென்று விவரம் கூறி அழைத்து வரும் பணி இவன் தலையில்.
அப்படி பேச வந்தவர்கள் டைம் போவது தெரியாமல் பேசி தொந்தரவு அளித்தனர்.
போதாக்குறைக்கு அவரவர் வீட்டில் இருந்து வந்து ஓசியில் போன் பேசிவிட்டு சென்றனர்.
அப்பாடா இன்றுதான் அவனுக்கு சான்ஸ் கிடைத்தது , டெலிபோன் எடுத்து பேச,
ரிசீவரை ஆவலுடன் எடுத்து காதில் வைத்துக் கொண்டதும் அந்த பக்கத்தில் இருந்து பேசிய ஒரு பெண்மணி, 'ஹல்லோ..' என்று கூறி இவர்கள் வீட்டு டெலிபோன் நம்பரை குறிப்பிட்டு, "இது உங்கள் வீட்டு சரியான டெலிபோன் நம்பர்தானே?"என்றார்.
இவனும் பெருமையுடனும், பூரிப்புடனும், "ஆமாம்..!", என்றான்.
மறுமுனையில் இருந்து பதில் வந்தது. "நான் டெலிபோன் ஆஃபிஸிலிருந்து பேசுகிறேன். டெலிபோன் லைனை கட் செய்ய போகிறோம்" என்று கூறி அவர் வைத்துவிட்டார்.
அப்பொழுது வந்த அப்பா, யார் பேசினார்கள், என்ன சொன்னார்கள் என்று வினவினார்.
இவனும் நடந்ததை சோகத்துடன் கூறினான்.
அப்பா, "அப்பாடா, நான் நாளை ரிடையர் ஆக போவதால் இனி டெலிபோன் வேண்டாம் என்று கூறி விட்டேன். நல்ல வேளை கட் செய்து விட்டார்கள்", என்று கூறி விட்டு தன் வேலையை கவனிக்க சென்று விட்டார்.
அதற்குள் அங்கு கூடிய அக்கா, தம்பி, தங்கை ஆகியோர் துக்கம் விசாரிக்க, இவன் சுருங்கிய முகத்துடன் விளக்கினான் நடந்ததை.
இதற்கு எல்லாம் சாட்சி அங்கு மேஜை மீது இருந்த, டெலிபோன் மணி அடிக்க முடியாத அந்த கருப்பு நிற தொலைபேசி.
அப்பொழுதே அறிந்துக் கொண்டான் எதிர்பார்த்து நினைத்தால் மட்டும் போதாது, காலமும், நேரமும் சேர்ந்து வந்தால்தான் கை கூடும் என்று!