

'நம்பினார் கெடுவதில்லை. என்ற நான்கு மறை தீர்ப்பு' என்ற பாடலின் கருத்துப்படி நம்பிக்கை வைத்து செயலாற்றியவர்கள் எவரும் கெட்டுப்போனதாக சரித்திரம் இல்லை. அசைக்க முடியாத மலைகளைக் கூட அசைக்க வல்ல மாபெரும் சக்தி நம்பிக்கையிடம் உள்ளது.
மேல் நாட்டைச் சேர்ந்த டேவிட் போப்பர்பீல் மிகப்பெரும் சாதனைகளை நம்பிக்கையின் சக்தி கொண்டே படைத்தார். ஆசிலிட்டிகள் என்பவர் மாதம் 65 டாலர் சம்பளத்தில் வேலை பார்த்தவர். நம்பிக்கையின் மகத்தான சக்தி பற்றி கிலாடு பரிஸ்டல் என்பவர் எழுதிய புத்தகத்தை அவர் படித்தார்.
அதில் சொல்லப்பட்ட விஷயங்களை கவனமாக பயிற்சி செய்ய ஆரம்பித்த உடன் அவருக்கு பணம் குவிய ஆரம்பித்தது. அமெரிக்க ரேடியோவில் மிகப்பெரிய சம்பளத்தில் பல வாய்ப்புகளைப்பெற்ற அவர் பணம் சம்பாதித்து மிகப்பெரிய செல்வந்தர் ஆனார். ஆகவே நம்முடைய வாழ்க்கையை உயர்த்தக்கூடிய மகத்தான சக்தி நம்பிக்கைக்கு உண்டு என்பதனை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்.
நம்பிக்கை பெறுவதற்கு யாருடைய தயவும் உதவியும் நமக்குத் தேவையில்லை. நம்முடைய வாழ்க்கையில் எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நடப்பதாக நாம் முதலில் நம்ப வேண்டும். அப்போது நம்பிக்கை பலம் அடைந்து நாம் விரும்புவது நடப்பதற்கான சூழ்நிலை உருவாகிவிடும்.
இதற்கு வேறு வார்த்தை என்னவென்றால் நாம் விரும்புவதை அடைவதற்கான சாதக சூழ்நிலையினை நம்பிக்கையின் மூலம் நம்மால் ஏற்படுத்திக் கொண்டுவிட முடியும். மாவீரன் அலெக்சாண்டர் நம்பியது அவருடைய வாழ்க்கையில் நடந்தது.
ஜவஹர்லால் நேரு சாதிக்க வேண்டும் என்று எதை நம்பினாரோ அதை சாதித்து சுதந்திர பாரதத்தின் பிரதமராக 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார். உங்களால் முடியும் என்று நம்புவதன் மூலம் எதை நினைக்கிறீர்களோ அது உறுதியாக நடக்கும்.
விடா முயற்சியின் மூலம்தான் தேவையான நம்பிக்கையினைப் பெறமுடியும். நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படும் பொழுது அது உங்களுடைய மனப்பான்மையாகவே மாறிவிடும்.
பரம்பரையாக ஒரு தொழிலை செய்கின்றவர்கள் அந்த தொழிலில் சுலபமாக வெற்றிபெற தொழிலில் கிடைக்கின்ற பயிற்சி ஒரு காரணம் என்பது உண்மைதான். ஆனாலும் அந்தத் தொழில் பரம்பரை தொழில் என்பதால் அந்தத் தொழிலில் வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கையுடன் தொழிலை தொடங்குகிறார்கள்.
இந்த நம்பிக்கையே வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழ்நிலையினை அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது. யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனுடைய பலம் நம்பிக்கையில் என்ற திரைப்படப் பாடல் வழிகளுக்கு ஏற்ப நம்பிக்கையின் சிறப்பு தெளிவாகத் தெரிகிறது.