சின்னஞ் சிறிசுகள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். காசு கொடுத்தாலும் கலகலப்பு வராத காலம் முதுமை. டிப்ரஷன் எனும் ஆழ்மனச் சோர்வு முதுமையில் ஆட்டிப் படைக்கிறது. இளமையில் உற்சாகமும் முதுமையில் சோர்வும் வாழ்வின் அமைப்பு. ஆனால் இளமையிலேயே சோர்வு என்றால் வாழ்க்கை என்னாவது?
உடற் சோர்வை சத்தான உணவு முறை மூலம் மாற்றலாம். மனச் சோர்வு வந்தால் என்ன செய்வது? பூலோக சொர்க்கமான அமெரிக்காவில் பள்ளிப் பிள்ளைகள் தொழில் அதிபர்கள், வாலிப வணிகர்கள் கூட டிப்ரஷனில் சோர்ந்து போகிறார்கள். மனச் சோர்வு ஏன் வருகிறது. எண்ணங்களின் அலைவீச்சே மனம். மனதின் இயக்கம். ஒரு அலை எவ்வளவு உயரமாய் எழுந்து ஆடுகிறதோ அவ்வளவு மூர்க்கமாக தரையில் எரியப்படும். ஒங்கி அடி விழும் எழுச்சியைத் தொடர்வது வீழ்ச்சி. இந்த வீழ்ச்சியைத் தாங்க முடியாதவர்கள் சோர்வை அடைகிறார்கள். ஒவ்வொரு வீழ்ச்சியாலும் பாதிக்கப்படாமல் மறுபடியும் எழுவதே உயிர்ப்பு. இயற்கை வாழ்முறை. வீழ்ச்சியின் வேகத்தை மீண்டும் எழுவதற்கான வேகமாக மாற்றிக் கொள்வதே சாமர்த்தியம். சில சமயங்களில் இந்த கடல் அலைகளின் எழுச்சி, வீழ்ச்சியை பூமி தாங்கிக் கொள்ள முடியாத மாதிரி, மன எழுச்சி, வீழ்ச்சியை உடம்பு தாங்க முடிவதில்லை. எனவே உடம்பை பயன்படுத்தினால் பாதி வெற்றி. வாழ்வின் இயக்கத்தை புரிந்து கொண்டால் மீதி வெற்றி.
சோர்வை நீக்க வழி உண்டு. அனுமனுக்கு மகா உற்சாகமாய என்ற நாமம் உண்டு. சீதையைத்தேட கடல் கடந்து போக முடியாது என்று அனுமன் சுருண்டு சோர்ந்தான். அப்போது ஜாம்பவான் அனுமனை உற்சாகப்படுத்தி அனுமனின் நம்பிக்கைத் தீயை ஊதி ஊதி, அனுமனும் விஸ்வரூபம் எடுத்து விண்ணில் பாய்ந்தான். கடலில் பறக்கும்போது அனுமனுக்கு மீண்டும் சோதனை. மைநாகமலை, மற்றும் சூரஸை போன்று பல தடைகளை சந்தித்தார். தன்னம்பிக்கை தள்ளாடிய தருணத்தில் கடவுள் நம்பிக்கைக்கும் தாவுகிறார். ராம நாமத்தை ஜபித்து கடலைக் கடந்து வெற்றிபெற்றார். இது உணர்த்துவது என்ன? நாம் சோர்வாக இருக்கும்போது நமது பலத்தை நினைவூட்டும் நல்ல நண்பர்கள் நம் கூட இருந்தால் தன்னம்பிக்கை தூண்டப்பட்டு வெற்றி அடைவது நிச்சயம். தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் அரிசியும் கோதுமையும் மாதிரி. ஒன்று இல்லாதபோது மற்றொன்றை பயன்படுத்தலாம்.
தன்னம்பிக்கை உடையவன் கடவுளைக் கும்பிட மாட்டான். கடவுள் நம்பிக்கை உள்ளவன் முயற்சி செய்ய மாட்டான் என்ற வெட்டி விஷயங்களை வெளியே வீசிவிட்டு முன்னேறப் பாருங்கள். தன்னம்பிக்கையோடு இரு. அது தளரும்போது தட்டிக் கொடுத்து முறுக்கேற்றும் நண்பர்களைக் பெறு. அதற்கும் வழியில்லையா. இறை நம்பிக்கையை பயன்படுத்து. தயக்கம் இன்றி மாறி மாறி இவற்றைப் பயன்படுத்தி வெற்றியைக் குவிக்கப்பார். இதுவே அனுமனிசம். இதை நீ புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.