
உலகத்தின் நீக்கு போக்குகளைத் தெரிந்திருந்து வைத்திருந்தால் மட்டும் போதாது, மனதை சமநிலையில் வைத்துக் கொள்வது முக்கியம். நம்முடைய மனம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு பொருந்துவதைத்தான் சமநிலை (Equilibrium). என்பார்கள்.
சில நேரங்களில் உணர்ச்சிகளும், எண்ணங்களும் நம்முடைய கட்டுப்பாட்டை மீறுவதாகிவிடும். மனிதனின் உடலமைப்பு மாதிரியே மனதுக்கும் ஒரு அமைப்பு உண்டு. இந்த அமைப்புக்கு ஏற்றபடி சந்தோஷமும், துக்கமும் அவனை பாதிக்கும். விவேகம் உள்ளவர்கள் மனப்பயிற்சியின் காரணமாக சந்தோஷத்தில் மிதக்காமலும், துக்கத்தில் ஒரேயடியாய் மூழ்கிவிடாமலும் தன்னைக் காத்துக்கொள்கிறான்.
சில துயரங்களும், சந்தோஷங்களும் மட்டுமே எல்லோருக்கும் விதிக்கப்பட்டவை. எல்லோருக்கும் ஒரே மாதிரியாக பாதிப்பை. ஏற்படுத்துபவை. விவேகி சமநோக்கின் காரணமாக அதிக பாதிப்பில்லாதவனாக ஆகிவிடுகிறான்.
மனவலிமை உள்ளவன் துன்பத்தில் இருந்து வெகு சீக்கிரமே மீட்சி அடைகிறான். தவம் செய்கிறவன் யோகி. பணம் தேடுகிறவன் போகி என்பது போல் மனதைசமநிலையில் வைத்துக்கொண்டவன் விவேகி.
இதில் வேடிக்கை என்னவென்றால் சிலரால் துன்பத்தையும் சோகத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது. சந்தோஷத்தை மட்டும் கட்டுப்படுத்த முடிவதில்லை. சிரிப்பை அடக்குவது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்குத் தெரியும். ஒருவருக்கு சந்தோஷத்திற்குத் தேவையான சகலமும் இருக்கும். ஆனால் அதை அனுபவிக்கும் மனநிலை இருக்காது. என்ன சார் லைஃப் என்று அலுத்துக் கொள்வார்கள். காரணம் மனநிலை சீரற்று இருப்பதுதான். சந்தோஷங்கள் நம் மனநிலைக் கேற்ப மாறுபடுகின்றன.
நீங்கள் சிறுவனாக இருந்தபோது கிரிக்கெட்டும் சடுகுடு ஆடுவதும் சந்தோஷம் தந்திருக்கும் இளமையில் காதலும் கனவுகளும் சந்தோஷம் தரும். நடுத்தர வயதில் பிள்ளைகள் படிப்பு, பெண் திருமணம் இதுதான் சந்தோஷத்தின் அடிப்படை. இப்படி மாறுகின்ற பருவத்திற்கேற்றார்போல் மனமும் மாறுகிறது. சந்தோஷமும் மாறுகிறது. மனதின் பின்னணி மாறும்போது மனதின் பிரதிபலிப்புகள் மாறுகின்றன.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் முதலில் மனவலிமையை வளர்த்துக் கொள்வதுதான். அதை வைத்துக்கொண்டு மனநிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். மனதை சமநிலையில் வைத்துக் கொள்கிறவர் தள்ளிப்போன பிரமோஷன் பற்றிக்கவலை படுவதில்லை. பிறந்தநாள் சந்தோஷத்தை அனுபவிக்கும்போதே உலகில் எதுவும் சாச்வதமில்லை என்ற எண்ணமும் அவருக்குள் பதிந்திருக்கும். சமநிலைமையே ஒருவருக்கு அமைதிதரும்.