போராட்டம் இல்லாமல் வாழ்க்கை உண்டா? போராட்டத்தின் வீரியம் வேண்டுமானால் வித்தியாசப் படலாம். அல்லது போராட்டத்தை எதிர்கொள்ளும் வலிமை ஒருவருக்கொருவர் மாறுபடும். ஆனால் போராட்டமே இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமையாது.
வாழ்க்கையில் நாம் எப்படி சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். அவ்வளவுதான். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.
பள்ளி ஒன்றில் உயிரியல் ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று பாடம் எடுத்தார்.
பிராக்டிக்கலாக பாடத்தை மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சிக் கூட்டினைக் காட்டி "இன்னும் சில மணி நேரத்தில் வண்ணத்துப்பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரும். அதற்குள் அதனருகில் சென்று யாரும் அதற்கு உதவக் கூடாது" என்று கண்டிப்புடன் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.
மாணவர்கள் அனைவரும் ஆவலுடன் அந்தக் கூட்டினை உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தனர். எப்படி புழு பூச்சியாக மாறி வெளியே வரும் என்பதை ஆச்சரியத்துடன் ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாறிக் கொணாடனர்.
அவர்களில் ஒரு மாணவன் மட்டும் அந்தப் பூச்சி மீது இரக்கப்பட்டான். எப்படி இவ்வளவு பெரிய கூட்டை உடைத்து இந்த சின்னப்பூச்சியால் வெளியே வர முடியும் பாவமில்லையா என்று எண்ணியவன் ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவி செய்யத் தீர்மானித்து
வண்ணத்துப்பூச்சி போராடத் தேவை இன்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான்.
வெளியே வந்த வண்ணத்துப் பூச்சியைக் கண்டு மாணவர்கள் ஆனந்தமாக பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் என்ன ஒரு சோதனை? சிறிது நேரத்திற்குப் பிறகு வண்ணத்துப்பூச்சி இறந்து விட்டது.
ஆசிரியர் வந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்டார். அந்த மாணவனை அழைத்தார். நீ அந்தப் பூச்சியை சிரமமின்றி வெளியே வந்து வாழும் என நினைத்தாய். ஆனால் நீயே அதன் இறப்பிற்கு காரணமாகி விட்டாய். பரவாயில்லை இந்த அனுபவம் உங்களுக்குத் தேவைதான்.
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். எந்த உயிரும் கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பதுதான் இயற்கையின் சட்டம். இந்த மாணவன் அந்த வண்ணத்துப்பூச்சியை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால் வலிமையின்றி அது இறந்து விட்டது. போராடினால்தான் வெற்றி" என்றார்.
மாணவர்கள் தங்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத்தந்த வண்ணத்துப்பூச்சிக்கு நன்றி சொன்னார்கள். அவசரப்பட்ட மாணவன் மன்னிப்பு கோரினான்.
இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன் படுத்தினால் வெற்றி நமதாகும். போராட்டங்கள் இல்லாமல் கிடைக்கும் எதுவுமே பயன் தராது. போராடிப் பெறும் எதற்கும் அதிக மதிப்பு உண்டு.
ஆகவே செயலுக்கு இடையில் வரும் சோர்வு போன்ற தடைகளைக் கண்டு அஞ்சாமல் போராடிப் பெறுவோம் வெற்றி எனும் பொக்கிஷத்தை!