அரிஸ்டாட்டில் பார்வையில் ஆளுமை: வெற்றிக்குத் தேவையான நற்பண்புகள்!

Personality in Aristotle's view
Motivational articles
Published on

லைமைத்துவம் என்பது ஒரு பதவி, ஒரு நாற்காலி அல்லது அதிகாரத்தின் அடையாளம் என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள். ஆனால், கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில் (Aristotle), தலைமைத்துவத்தை முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் பார்க்கிறார். அவரைப் பொறுத்தவரை, தலைமைத்துவம் என்பது அதிகாரம் செலுத்துவது அல்ல; அது ஒரு வாழ்வியல் முறை மற்றும் உயர்ந்த பண்புகளின் தொகுப்பு. ஒரு உண்மையான தலைவனை உருவாக்கும் அடிப்படைப் பண்புகள் எவை என்பதை அரிஸ்டாட்டில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அது பற்றி இப்பதிவில் காண்போம்.

முதலில் தொண்டன், பிறகு தலைவன்

அரிஸ்டாட்டிலின் மிக முக்கியமான கருத்து, "நல்ல பின்தொடர்பவராக இருக்க முடியாதவர், ஒரு நல்ல தலைவராக இருக்க முடியாது" என்பதாகும். கட்டளையிடுபவர் மட்டுமே தலைவன் அல்ல, அவரது தலைமைப்பண்பு கீழ்ப்படிதலில் இருந்தே தொடங்குகிறது. மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒரு அணியாகச் செயல்படத் தெரிந்தவரே பிற்காலத்தில் அந்த அணியை வழிநடத்தத் தகுதியானவர் ஆகிறார்.

சுயக்கட்டுப்பாடு எனும் அடித்தளம்

உலகை ஆள நினைக்கும் முன், ஒருவன் தன்னைத்தானே ஆளக் கற்றுக்கொள்ள வேண்டும். "ஒருவர் தங்களைத் தாங்களே ஆளமுடியாவிட்டால், மற்றவர்களை ஆளுவது அபத்தமானது" என்கிறார் அரிஸ்டாட்டில். கோபம், உணர்ச்சிகள் மற்றும் விருப்பங்களைக் கட்டுப்படுத்தத் தெரிந்த ஒருவரால் மட்டுமே, இக்கட்டான நேரங்களில் நிதானமான முடிவுகளை எடுக்கமுடியும்.

சிறந்து விளங்குவது ஒரு பழக்கம் (Habit)

வெற்றி என்பது ஒரு நாளில் கிடைப்பதல்ல. அரிஸ்டாட்டிலின் புகழ்பெற்ற வாக்கியமான, "நாம் மீண்டும் மீண்டும் என்ன செய்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். எனவே, சிறந்து விளங்குவது ஒரு செயல் அல்ல, அது ஒரு பழக்கம்," என்பது ஒவ்வொரு தலைவனும் மனதில் கொள்ளவேண்டிய மந்திரம். ஒரு நல்ல தலைவன் எப்போதாவது ஒருமுறை மட்டும் சரியாகச் செயல்படுவதில்லை; ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலிலும் உயர்ந்த தரத்தைக் கடைப்பிடிக்கிறான்.

நேர்மையும் துணிவும் (Integrity and Courage)

தலைமைத்துவத்தின் முதுகெலும்பு 'நம்பிக்கை'. அந்த நம்பிக்கை நேர்மையின் மூலமே உருவாகிறது. பொய்யர்கள் உண்மையைச் சொன்னாலும் உலகம் அவர்களை நம்பாது. எனவே, ஒரு தலைவரின் நற்பெயர் என்பது அவரது நேர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.

அதேபோல, கடினமான முடிவுகளை எடுக்கத் தைரியம் அவசியம். "தைரியம் இல்லாமல் இந்த உலகில் எதையும் செய்ய முடியாது," என்று அரிஸ்டாட்டில் கூறுவது போல, பிரச்னைகளைக் கண்டு அஞ்சாமல், அதைத் துணிவுடன் எதிர்கொள்பவனே அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறான்.

இதையும் படியுங்கள்:
போட்டியும் வளர்ச்சியும்: ஒப்பீடு எப்படி உத்வேகத்தை அளிக்கிறது?
Personality in Aristotle's view

அறிவும் அன்பும் கலந்த சேவை

தலைமைத்துவம் என்பது வெறும் அறிவைச் சார்ந்தது மட்டுமல்ல; அது இதயம் சார்ந்தது. "இதயத்தைப் பயிற்றுவிக்காமல் மனதைப் பயிற்றுவிப்பது கல்வியே அல்ல." ஒரு தலைவன் தனது குழுவினருக்குக் கற்பிப்பவனாகவும், அவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவனாகவும் இருக்கவேண்டும். அதிகாரம் செலுத்துவதை விட, மற்றவர்களுக்குச் சேவை செய்வதிலும், அவர்களை ஆதரிப்பதிலும் தான் உண்மையான தலைமை அடங்கியிருக்கிறது.

சிறந்த தலைவர்கள் பணிவானவர்கள், நேர்மையானவர்கள் மற்றும் பொறுமையானவர்கள். "பொறுமை கசப்பானது, ஆனால் அதன் பலன் இனிமையானது" என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பதவியால் வரும் மரியாதை தற்காலிகமானது; ஆனால், மேற்கூறிய பண்புகளால் வரும் மரியாதை நிரந்தரமானது. இவற்றைத்தான் அரிஸ்டாட்டில் வலியுறுத்துகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com