

வாழ்வில் வெற்றி பெற நாம் அமைத்துக் கொண்ட வேலிகளைத் தாண்டி முயற்சிகள் செய்ய வேண்டும். சிலர் கடுமையாக முயற்சி செய்தும் வெற்றி பெறாமல் இருப்பதற்கு உண்மையான காரணம் அவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சிப்பது இல்லை.
கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடி விடுவார்கள். அந்தக் கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப் பதற்காக இருக்கும்... அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி செய்யும்.
மேலே உள்ள கண்ணாடியில் இடித்து,“ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும்போது பார்த்து போகனும் என்று தீர்மானித்து கொள்ளும். அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக,வெளியே செல்ல முயற்சி செய்யும்.
அதே அடி... அதே வலி... அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து விடும் சரி, இதுதான் நமது வாழ்க்கை. இந்த கூண்டுக்குள்தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும்போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை... ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு அங்குல தூரத்தில் நின்று விடும்.
இந்த முறை, கண்ணாடியில் இடி இல்லை. வலியும் இல்லை. அதேபோல், இடது பக்கம் பறக்கும். ஒரு அங்குல தூரத்தில் நின்று விடும். அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்தத் திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக்கொண்டு அந்த கூண்டிலேயே தன் மீதிநாள் வாழ்க்கையை முடித்துவிடும்.
இப்படி, அந்தப் பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள். இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.
ஆனால், அந்தப் பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு அங்குல தூரத்தில் நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வாழும்.
அந்தப் பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, முயற்சி செய்திருந்தால் அந்த ஒரு அங்குல தூரத்தைக் கடந்து இருக்கும். ஒரு அங்குல தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும். தொடர்ந்து முயற்சி செய்வதை கை விட்டு விட்டு., நம்மில் பலர், இந்த பூச்சியைப் போன்றுதான் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.
தொடர்சியாக முயற்சி செய்பவர்கள் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் வெற்றி பெறுவர். எப்போதும் முயற்சியை மட்டும் விட்டு விடக்கூடாது.
காலம் கடந்தாலும் பொறுமையாக முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்யுங்கள் ''வெற்றி'' கிடைக்கும். முயற்சி செய்யுங்கள் ''தோல்வியும்'' கிடைக்கும்...! தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். "தோல்வியும் வெற்றியாக' மாறும்"!
-பொ. பாலாஜிகணேஷ்