
நாம் எல்லோருமே அமைதியைத்தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறோம். பொருள் இருப்பவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி அதிலும் நிறைய செல்வங்கள் இருக்கும். ஆனால் அவரிடத்தில் அமைதி இருக்காது.
நம்மால் எதை அடைய முடியுமோ அதை எளிய வழியில் அடைவது தான் அமைதி. நம்மை சுற்றி அமைதியாக இருக்கவேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியது நாம்தானே.
அதேபோல் நம்மைச் சுற்றி எங்கும் அமைதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண். அது இயற்கையில் சாத்தியமில்லை.
தொடர் நீர்வீழ்ச்சியைப்போல அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருந்து கொண்டேதான் இருக்கிறது. அது ஓய்வதில்லை.
அந்த வேலைகளுக்கு இடையேயும், அமைதியான உறக்கம்போல, நம் உள்மனம் அமைதியாக இருக்குமானால் அதை விடப் பெரிய சாதனை வேறெதுவும் இருக்கமுடியாது. அந்த அமைதியின் முத்திரை நாம் செய்கின்ற செயலின் சிறப்பில் கண்டிப்பாக வெளிப்படும்.
அனைத்து வசதிகளும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதி அல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.
ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒருநாள் விடியும் என்று தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களை விட, 'நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்குப் பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளதுதான் உண்மையான அமைதி.
சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவதுதான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று! தொல்லைகளும் துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே ''உண்மையான அமைதி.''
மனதை நமக்கு பிடிக்கும் விஷயங்கள் எல்லாம் சிறகடித்து பறக்க விடுவோம். அப்பொழுதுதான் மனதில் அமைதி நிலைக்கும். நீடித்தும் இருக்கும் முதலில் எப்பொழுதும் பதட்டமாகவும் கோபமாகவும் இருப்பதை தவிர்த்தாலே போதும் நம் மனதில் அமைதி வந்துவிடும்.