

நாம் எல்லோரும், காலையில் எழுந்தவுடன் வாசலை தெளித்து சுத்தம் செய்கிறோம்.
வீட்டை பெருக்கி சுத்தம் செய்கிறோம்.
கழிவறையை சுத்தம் செய்கிறோம்.
நமது உடலையும் தலைமுடியையும் சுத்தம் செய்கிறோம்.
துணிகளை துவைத்து சுத்தம் செய்கிறோம்.
சமையல் செய்யும் பாத்திரங்களை தேய்த்து அலம்புகிறோம்.
சமையல் செய்யும் அடுப்பை சுத்தம் செய்கிறோம்.
காய்கறிகளை கழுவுகிறோம்.
பழங்களை கழுவுகிறோம்.
குடிதண்ணீர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்கிறோம்.
பூஜை அறையை சுத்தம் செய்கிறோம்.
பூஜை பாத்திரங்களை தேய்த்து அலம்புகிறோம்.
குளிர்சாதன பெட்டியையும் அரைப்பான் இயந்திரத்தையும் துடைத்து துடைத்து வைக்கிறோம்.
மின் விசிறியையும் தொலைகாட்சி பெட்டியையும் சுத்தம் செய்கிறோம்.
வருடத்திற்கு ஒருமுறை வீட்டை சுத்தம் செய்து பெயிண்ட் அடிக்கிறோம்.
வாரத்திற்கு ஒருமுறை தோட்டத்தில் இருக்கும் வேண்டாததை களைந்து சுத்தம் செய்கிறோம்.
நாம் ஓட்டும் வாகனத்தை தினமும் துடைத்து சுத்தமாக வைக்கிறோம்.
தொலைக்காட்சி பெட்டியையும் கணினியையும் துடைத்து வைக்கிறோம்.
நாற்காலியையும் மேசையையும் துடைத்து வைக்கிறோம்.
கைகளையும் கால்களையும் அவ்வப்போது கழுவிக்கொண்டே இருக்கிறோம்.
எல்லாவற்றையும் தினமும் துடைத்து வைத்து சுத்தம் செய்யும் நாம் மிக முக்கியமான ஒன்றை சுத்தம் செய்ய மறந்து விட்டோமே...
அது என்ன என்று தெரிகிறதா??
அந்த முக்கியமான ஒன்றை நாம் சுத்தம் செய்யாவிட்டால் வாழ்க்கையில் உன்னத நிலையை நிச்சயமாக அடைய முடியாது.. என்ன என்று கண்டுபிடித்தீர்களா?
ஆம்! மக்களே! நம்முடைய மனது...
அவ்வப்போது எல்லாவற்றையும் சுத்தம் செய்ய நினைக்கும் நாம், ஏன் மனதை மட்டும் சுத்தமாக வைத்துக்கொள்ள யோசிப்பதில்லை.
கண்டதையும் மனதிற்குள் போட்டுக்கொண்டு அதை குப்பையாக்கி வைத்திருக்கிறோம்.
வேண்டாத எண்ணங்களை தூக்கி எறிந்தால்தானே அது சுத்தமாக இருக்கும்.
எப்படி வீட்டையும் எல்லாவற்றையும் தினம் தினம் சுத்தமாக வைக்கிறோமோ அதைப்போல நம் மனதையும் சுத்தமாக வைக்க வேண்டும் இல்லையா.
உடல் ஆரோக்கியத்திற்கு மனமும் சுத்தமாக இருக்கவேண்டும்.
மனதை சுத்தமாக வைக்காமல் கண்டதையும் நிரப்பிக் கொண்டு எப்போதும் எதிர்மறையாகவே யோசித்துக்கொண்டே இருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவோம்.
சுத்தமான உணவை உண்டால் மட்டும் போதாது. சுத்தமான மனதோடு உண்டால்தான் ஆரோக்கியம் கிடைக்கும்.
ஐஜீனிக் என்ற பெயரில் மிகுந்த கவனத்தோடு இருக்கும் நாம், நம் மனதை கவனிக்க மறந்து விட்டோமே… அதை சுத்தப்படுத்தவும் மறந்துவிட்டோம்.
நம்முடைய மனம் தூய்மையாக இருந்தால்தான் எண்ணங்களும் நேர்மறையாக இருக்கும் எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால் நற்சிந்தனைகள் உருவாகும். அதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படும். நம்முடைய தொழிலிலும் கல்வியிலும் முன்னேற்றம் ஏற்படும்.
நாள்தோறும் எல்லாப் பொருளையும் எப்படி சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதைப்போலவே மனதையும் சுத்தமாக வைத்திருக்கவும்
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய மனதை சுத்தமாக்கி எப்போதும் துய்மையோடு வைத்தால்தான், வாழ்க்கையில் நாம் உன்னத நிலையை அடையமுடியும்!