
"நம்முடைய அறிவும், திறமையும், அதிகாரமும், பொருளும், மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர, மற்றவர்களை இழிவுபடுத்த அல்ல, இதனை உணராதவர்கள்தான் இழிவுபட நேரும்.
செருக்கு அதாவது தலைக்கனம். நம் தலையெழுத்தை மாற்றிவிடும், தலைக்கவசம் நம் தலைக்கு கனமாக இருந்தாலும் உயிரைக்காக்கும், ஆனால் தலைக்கனம் கொஞ்சம் இருந்தாலும் வாழ்வை அழிக்கும்.
தலைக்கனத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும். உடம்புக்கு நோய் என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். ஆனால் தீய பண்புகள் மனம் தொடர்புடையது, எனவே நாம்தான் அவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்யவேண்டும். பெரிய பதவி வகிப்பவர்கள் இது போன்ற சிக்கல்களுக்குள் ஆளாகாமல் விழிப்புடன் இருக்கவேண்டும்.
தன் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணம் 'நான்தான்' என நினைப்பது கூடாது. மற்றவர்களிடம் உள்ள நல்ல கருத்தினை நாம் ஏற்கும் மனநிலை வேண்டும். நான் இந்த வேலையை நேர்த்தியாகச் செய்தேன்’ என நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதே நேரம் இந்த வேலையை வேறு யாரும் என்னை விட சிறப்பாகச் செய்திட இயலாது என நினைத்திடக் கூடாது.
நம்மைப் பற்றியும், நமது சாதனைகளைப் பற்றியும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
மற்றவர்கள் சொல்வதை அக்கறையுடன் கேட்கும் எண்ணம் வேண்டும். ஆங்கிலத்தில் ‘ஆக்டிவ் லிசனிங்’ (Active Listening) என்பார்கள்.
இதன் மூலம் மற்றவர்களிடம் இருக்கும் நல்லவை யாவும் தெரியவரும். அது மட்டுமல்ல, நம்மைப் பற்றிய விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் எண்ணம் உருவாகும்.
‘எனக்கு நல்ல அறிவு இருக்கிறது, நான் சாதிக்கின்றேன்’ என நினைப்பதில் தவறில்லை. இன்னும் தெளிவுபடக் கூற வேண்டுமானால் வெற்றிகளை பட்டியல் இடுவதால் தன்னம்பிக்கை பிறக்கும்.
ஆனால் தன்னம்பிக்கை வேறு; ஆணவம் வேறு என வேறுபடுத்திப் பார்ப்பதில் தெளிவுவேண்டும். ‘எனக்குத்தான் அனைத்தும் தெரியும்; வேறு எவரும் எனக்கு நிகரில்லை’ என நினைப்பது நம் குறைபாடுகளின் வெளிப்பாடு. மற்றவர்கள் தன்னை வென்று விடுவார்களோ, மற்றவர்கள் தன்னைவிட அதிகம் தெரிந்திருப்பார்களோ! என்பது பயத்தின் வெளிப்பாடு.
இந்தப் பேருலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே. நாம் பெறவேண்டியது நல்ல அனுபவங்களைத் தவிர வேறோன்றுமில்லை.