
நன்றி என்ற ஒற்றை வார்த்தை சக்தி மிக்கது. வலிமையானது. சென்ற வாரம் முழங்காலில் வலி மிகுந்ததால் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பிசியோதெரபி செய்து கொள்ளச் சென்றேன்.
பிசியோதெரபிஸ்ட் முழங்காலில் ஒரு பட்டையை மாட்டி இயந்திரத்தை இயக்கி அடுத்த நோயாளியை பார்க்கச் சென்றார். பதினைந்து நிமிடத்தில் எனது பிசியோ முடிந்தது. உதவியாளர் ஒருவர் வந்து என் காலில் பொருத்தப்பட்ட பட்டையை அகற்றித் துடைத்து சுத்தம் செய்தார். அந்த பெண்மணியிடம் "நன்றிம்மா" என்றேன்.
அதற்கு அவர் "நான் என் வேலையைத்தான் செய்கிறேன். எதற்கு சார் எனக்கு நன்றி சொல்கிறீர்கள்" என்றார்.
"நீங்கள் எனக்கு உதவி செய்கிறீர்கள். உங்களுக்கு நன்றி சொல்வதில் தவறில்லையே" என்றேன். இதை ஏற்றுக் கொண்ட அவர் புன்னகைத்தார். இதற்கு முன்னால் யாரும் அவருக்கு நன்றி சொல்லியிருக்கமாட்டார்கள் போலிருக்கிறது. நன்றி என்ற சொல் ஒருவருடைய பணியை அங்கீகரிக்கும் ஒரு உன்னதமான வார்த்தை.
நீண்டதூர பேருந்துப் பயணங்களில் நாம் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்கிக்கொண்டே பயணிப்போம். இறங்கும் இடம் வந்ததும் நாம் நமது பையை எடுத்துக்கொண்டு இறங்கிச் சென்று விடுவோம். பேருந்து ஓட்டுனர் இரவு முழுவதும் தூங்காமல் கஷ்டப்பட்டு பேருந்தை ஓட்டி நம்மை பத்திரமாக நாம் சேர வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டுள்ளார். அவருக்கு பேருந்தில் இருந்து இறங்கும்போது ஒரு நன்றி சொல்வதில் தவறில்லையே. நிச்சயம் சொல்லத்தான் வேண்டும்.
நாம் எல்லோரும் அவரவர் வேலைகளைத்தான் செய்கிறோம். அதற்கான ஊதியமும் பெறுகிறோம். எல்லோருடைய பணிகளும் ஒரேமாதிரியானது அல்ல. சிலருடைய பணி கடினமானது. நமக்காக அத்தகைய பணிகளைச் செய்வோர் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் நாம் அவர்களுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.
நாம் உதிர்க்கும் நன்றி என்ற ஒற்றைச்சொல் அதைப் பெறுபவர்களின் மனதில் மகிழ்ச்சியை விளைவிக்கும். ஊக்கத்தைத் தரும். நம்மைப் பற்றிய உயர்வான அபிப்ராயத்தை உருவாக்கும்.
உங்களுக்கு உதவுபவர்களுக்கு மறக்காமல் நன்றி சொல்லிப் பாருங்கள். உங்கள் மனதில் ஒருவித திருப்தி உருவாவதை உணர்வீர்கள். அவர்களின் முகத்திலும் புன்னகை பூக்கும். எனவே நண்பர்களே! இன்றிலிருந்து நன்றி சொல்லப்பழகுங்கள்.