
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் உடம்பில் ஒட்டுவதுதான் ஒட்டும் என்பார்கள். கண்ணுக்கு அழகாக தெரிகிற எல்லாவற்றிற்குமே ஒரு காலாவதி நாள் உண்டு என்பதை மறக்க வேண்டாம். இழப்பு பற்றி கவலை கொள்ளாமல் மனதை தேற்றிக் கொள்வதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது.
சில விஷயங்கள் அல்லது உறவுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவற்றில் மாற்றம் எதுவும் நேராமல் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதாவது அதன் உள்ளார்ந்த இயல்பு மாறாது. ஆற்று மணலில் எவ்வளவு விழுந்து புரண்டாலும், உடல் முழுவதும் மணல் ஒட்டாது என்பதுபோல.
சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாததால் எவ்வளவு முயற்சி செய்தாலும் மாறாது. எனவே மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக்கொண்டு, நம்மால் மாற்றக்கூடியவற்றில் கவனம் செலுத்துவதுதான் மன அமைதிக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் சில விஷயங்கள் நம் விருப்பப்படி நடக்காது. நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் முயற்சி செய்வது தேவையற்ற மனவலியை ஏற்படுத்தும்.
வாழ்க்கையில் நிலையானது மாற்றம் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குப் பிறகு முயற்சிகள் பலனளிக்காது என்பதை உணர்ந்தால், அவற்றை மகிழ்ச்சியுடன் கைவிடுவது நல்லது. இதனால் தேவையற்ற சுமைகளை தவிர்க்கவும், மனவலியின்றி வாழவும் முடியும்.
சில விஷயங்களை அப்படியே விட்டு விடுவது நல்லது. சாத்தியமானதை மாற்றி, மற்றவற்றை அப்படியே அதன் போக்கில் இருக்க விடுவதுதான் நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை மாற்ற நினைப்பது பயனற்றது மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது. அதற்கு பதிலாக நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய விஷயங்களில் கவனம் செலுத்தலாம். மாற்ற முடியாத சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வது என்பது விட்டுக் கொடுப்பதோ அல்லது அதனை கைவிடுவதோ அல்ல. நாம் அதைப் பற்றி என்ன நினைக்கிறோம், உணர்கிறோம், எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை மாற்றிக் கொள்வது பற்றியது.
மற்றவர்கள் அல்லது சூழ்நிலைகளில் நமக்கு நேரடி கட்டுப்பாடு இல்லையென்றாலும், நம் எண்ணங்களையும் நடத்தைகளையும் கட்டுப்படுத்த நமக்கு முழு சுதந்திரமும் அதிகாரமும் உள்ளது. அத்துடன் விஷயங்கள் எப்படி நடந்தாலும் அதை நேர்மறையான மனநிலையுடன் எதிர்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
மாற்றி அமைக்க முடியாத விஷயங்களை நினைத்து வருத்தப்படுவதை விட நம்மை வடிவமைத்துக் கொள்ள நம் எண்ணங்களையும், நடத்தைகளையும் அதற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை புரிந்த கொண்டாலே போதும்! நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!