
பொதுவாக மக்கள் எல்லோரும் ஆனந்தம் என்பதை வந்து போகும் ஒரு உணர்ச்சியால் நினைக்கிறார்கள். உணர்ச்சி நிலையானது அல்ல. அது மாறிக்கொண்டே இருக்கும். உணர்ச்சியை நம்மால் உருவாக்க முடியாது. அப்படி முயன்றால் அது சகிக்க முடியாத வேதனை ஆகிவிடும். ஆனால் ஆனந்தத்தை நாம் நிலையாக அனுபவிக்க முடியும். உடல், மனம், உணர்ச்சி இவைகளை ஒரு சீரான நிலைக்குக் கொண்டு வந்தால், உயிரின் இயல்பான ஆனந்தத்தை நாம் அனுபவிக்கலாம்.
வயல் வெளியில் ஒரு காளை மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அதன் முதுகில் ஒரு குருவி அமர்ந்து மாட்டின் உடலில் இருந்த சிறு பூச்சிகளைத் தின்று கொண்டிருந்தது. தூரத்தில் உள்ள பெரிய மரத்தை குருவி ஏக்கமாய் பார்த்து "முன்பெல்லாம் இந்த மரத்தின் உச்சி கிளைக்குக் கூட என்னால் பறந்து போகமுடியும். இப்போது எனக்கு வலிமை இல்லை. அதன் கீழ் கிளைகளுக்குக் கூட என்னால் பறந்து செல்ல முடியவில்லை" என்று காளையிடம் வருத்தமாக சொன்னது.
உடனே காளை "இதற்காகவா வருத்தப்படுகிறாய்? என் சாணத்தை கொஞ்சம் சாப்பிட்டால் போதும். நீ இரண்டு வாரங்களுக்குள் உச்சிக்கே பறக்கலாம்" என்றது. இதெல்லாம் சாத்தியமா என்று குருவி கேட்க அது "மனித இனமே, என் சாணத்தை நம்பிதான் உள்ளது. சாப்பிட்டுப்பார் உண்மை தெரியும்" என்றது. குருவியும் அப்படியே செய்ய இரண்டே வாரத்தில் மரத்தின் உச்சிக்குப் பறந்தது. சில நொடிகள் கூட ஆகியிருக்கலாம். எங்கிருந்தோ வந்த குண்டு பாய்ந்து குருவி கீழே விழுந்து செத்தது.
இந்த கதையின் நீதி என்னவென்றால் பலநேரங்களில் மிகச் சாதாரணமாக விஷயம் கூட உங்களை உச்சிக்கு அழைத்துச் செல்லும். ஆனால் உங்களைத் தொடர்ந்து உச்சியிலே இருக்க வைக்காது. நீங்களும் இப்படித்தான். ஆனந்தத்தை அடைந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறீர்கள். உச்சிக்கு வந்து விட்டேடோம் என்று எண்ணுகிறீர்கள். ஆனால் அங்கேயே நிலைத்து இருக்க முடிவதில்லை. ஏனெனில் நீங்கள் வாழ்க்கையை இன்னமும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஆனந்தத்தில் நிலைக்க வேண்டுமென்றால், உள் நிலையிலும், வெளி நிலையிலும் ஒரு கட்டத்தை அடைய வேண்டுமென்றால், சரியான செயல்களைச் செய்யவேண்டும். ஆனால் மக்கள் சரியான செயல்களைச் செய்யாது, எப்படியோ, ஏதோ செய்து அந்தக் கட்டத்தை அடைய நினைக்கிறார்கள் அது அப்படி வேலை செய்யாது.