

நாம் வளர வளர தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளே நமக்கு ஒரு அனுபவ பாடமாக அமைந்து விடுவது உண்டு. நல்ல செயல்களை அப்படியே செய்வதும், சரியில்லாத செயல்களை திருத்தி நல்வழிப்படுத்திக் கொள்வதும் நம்முடைய கைகளில் தான் இருக்கிறது. அனுபவ அறிவு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஏட்டுக் கல்வியால் பெற்ற அறிவை விட அனுபவத்தின் (Motivational life story) மூலம் நாம் கற்றுக் கொண்டது ஏராளம்.
எந்த வேலைக்கு நாம் சென்றாலும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து கேட்பது முன் அனுபவம் இருக்கிறதா? எத்தனை வருடம் முன் அனுபவம் இருக்கிறது என்பதே. ஏனெனில் அனுபவத்தின் மூலம் அந்த வேலையைப் பற்றி நன்கு தெரிந்திருப்பார்கள். அதன் நுணுக்கத்தைப் பற்றிய அனுபவ அறிவு அவர்களுக்கு இருக்கும். முதலில் இருந்து அந்த பணியைப் பற்றி விளக்க வேண்டியது இருக்காது, என்பதாலேயே முன் அனுபவம் பெற்ற பணியாட்களையே நியமிக்கிறார்கள்.
நம் வாழ்க்கை நிகழ்ச்சிகள் நமக்கு அனுபவ பாடங்களை கற்றுக் கொடுப்பதை போல, பிறருடைய வாழ்க்கை சம்பவங்களில் இருந்தும் பாடங்கள் கற்கலாம்.
தன் வாழ்க்கையில் சிறு வயதில் சின்ன தப்புகளை சின்ன தவறுகளை செய்து அந்த தவறுகளுக்காக வருந்தி இனிமேல் அந்தத் தவறுகளை செய்வதில்லை என்று சபதம் எடுத்து, அதன்படி வாழ்ந்தவர் நம் மகாத்மா. இதை அவரது சுயசரிதை நூல் மூலம் அறியலாம் .
அமெரிக்கர்களுக்கு சுதந்திரம் பெற்று தந்த ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை, புத்தகம் வாயிலாக அறிந்த ஒரு இளைஞனின் மனதில் அமெரிக்காவில் அடிமை விலங்கை தகர்த்து எறிய வேண்டும் என்னும் வைராக்கியம் பிறந்தது. பிற்காலத்தில் அதற்காக பாடுபட்டு வெற்றி கண்டவர் தான் ஜனாதிபதி அபிரகாம் லிங்கன்.
ஹோமர் எழுதிய புத்தகம் நெப்போலியன் போனபார்ட்டை (Napoleon Bonaparte) உருவாக்கியது. காரல் மார்க்ஸ் எழுதிய தாஸ் கேபிட்டல் (Das Kapital) கம்யூனிஸப் புரட்சி எண்ணத்தை லெனினின் மனதில் விதைத்தது.
உலக வரலாற்றில் உங்கள் பெயர் சாதனையாளர் என அழியாத வண்ணம் பொறிக்கப்பட வேண்டும் என்றால் அனுபவம் எனும் உளியின் அடிகளைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.
ஆதலால் நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு அனுபவத்தையும் இறைவன் நமக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் என்றென்றும் எதிலும் வெற்றியே!