

இரண்டாவது உலகப் போரின் போது இந்திய ராணுவ வீரர்களை ஏற்றி வந்த ஒரு நீராவிப் படகின் மீது ஜப்பானியர்கள் குண்டை வீசவே அது நீரில் மூழ்க ஆரம்பித்தது. அதில் இருந்தவர்களில் ஐந்தே ஐந்து பேர்கள் மட்டும் அலைகள் பொங்கி வரும் ஆழ்கடலில்
லைஃப் போட்டில் ஏறித் தப்ப முடிந்தது. பல மணி நேரம் கழிந்தது. அதில் ஒருவர், “இந்தக் கடல் என்னை விழுங்கி விடும். நான் சுறாமீன்களுக்கு இரையாகப் போகிறேன்” என்று அலறினார். பயங்கர அதிர்ச்சியில் அவர் கடலில் விழுந்து உயிரை இழந்தார்.
இன்னொருவர் தனது குடும்பத்தை எண்ணி அழுதார். ”ஐயோ, அவர்கள் தவிப்பார்களே! அவர்களின் எதிர்காலத்திற்கு ஒன்றும் செய்யாமல் நான் இறக்கிறேனே” என்று புலம்பிய அவர் தனது நம்பிக்கையை இழந்து உயிரை விட்டார்.
மூன்றாவதாக ஒருவர், “அடடா! இன்ஷூரன்ஸ் பாலிஸி ஆவணங்கள் என்னிடம் அல்லவா இருக்கின்றன! என் மனைவியிடம் இதைக் கொடுக்காமல் இருந்து விட்டேனே! என்ன பரிதாபம்! நான் இங்கு இறக்கும் போது அவள் எப்படி பணத்தைப் பெறுவாள்” என்று கதறினார். அவரும் உயிரை இழந்தார்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
ஐந்து பேரில் மீதி இருந்த இருவர் கடவுளிடம் இருந்த நம்பிக்கையை உறுதிப் படுத்திக் கொண்டனர்.
“நிலைமை எவ்வளவு மோசமாக இருந்த போதிலும் உயிரை இழக்காமல் வாழ்ந்து கடவுள் நம்மை ஒரு நல்ல காரியத்திற்காகத் தான் படைத்திருக்கிறார் என்பதை நிரூபிப்போம். கடவுளின் தயை மீதும் சக்தியின் மீதும் நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது” என்று அவர்கள் கூறிக் கொண்டனர்.
முழுகிக் கொண்டிருந்த படகில் இருந்து நீரில் குதித்து அவர்கள் நீந்த ஆரம்பித்தனர். ஐந்தே நிமிடங்களில் கரையில் இருந்து கிளம்பி வந்த ஒரு ஹெலிகாப்டர் அவர்களைக் காப்பாற்றியது.
அது முழுகிக் கொண்டிருந்த படகிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்கான சிக்னல்களைப் பெற்றதால் உடனடியாகக் கிளம்பி வந்து அந்த வீரர்களைக் கண்டுபிடித்தது. கரையில் பத்திரமாக வந்து சேர்ந்த அவர்கள், “வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஐந்தே நிமிடங்கள் தான் இருந்தன” என்று கூறினர்.
தங்கச் சுரங்கங்களைத் தோண்டி தங்கம் எடுப்பவர்கள்,, “வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே மூன்றே மூன்று அடி மண் தான் இருந்தது” என்று கூறுவர்.
நாம் உயிர்வாழும் மூச்சே நம்பிக்கையினால் தான். ஒவ்வொரு உயிரும் ஒரு காரணத்தினால் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத் தான் படைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் மனிதனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். இளைஞர்கள் இந்த காரண- காரியத் தொடர்பை உறுதியாக நம்ப வேண்டும்.