
குரு என்றால் அவரைப் பார்த்ததும் ஒரு மனஎழுச்சி வரவேண்டும். அவருடைய இருப்பே ஊக்கத்தை தரவேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தீர்களானால் அது தவறு. உங்களை உணர்ச்சி வசப்படச் செய்வதற்கும் மூளைச்சலவை செய்வதற்கும் பெரிய வித்யாசமில்லை. குரு என்பவர் உங்களை உற்சாகப்படுத்த வரவில்லை.
உங்களை தைரியப்படுத்துவதும், ஊக்குவிப்பதும் அவர் பணி அல்ல. நீங்கள் அமைத்து வைத்திருக்கும் சில எல்லைகளைத் தகர்த்து எறிவதுதான் அவர் நோக்கம். நீங்கள் சிக்கியிருக்கும் பலவற்றில் இருந்து விடுவித்து சுதந்திரம் தருவதே அவர் விழைவு. கட்டுண்டு. பாதுகாப்பாக இருப்பதைவிட சுதந்திரமாக ஆபத்துகளை எதிர்கொள்வது உயர்ந்தது.
பகவத் கீதையில் இருந்தோ, பைபிள் மற்றும் குரானிலிருந்தோ இரண்டு பக்கங்களை படபடவென்று உணர்ச்சி வசப்பட சொல்லிவிட்டாலே அவரை குரு என்கிறார்கள். மதபோதகர் வேறு. குரு வேறு.
ஒரு சீடன் குருவிடம் முக்திக்கு என்ன வழி என்று கேட்டான். அவர் அவனிடம் இமயமலக்குப்போகச் சொல்லி வேறு எதிலும் கவனம் வைக்காமல் பகவத்கீதையில் நேரத்தை செலவு செய்ய முக்தி நிச்சயம் என்றார். சில மாதங்கள் கழித்து சீடனை சந்திக்க இமயமலை சென்றார். சீடன் வருத்தத்துடன் வரவேற்றான்.
"குருவே, நீங்கள் சொன்னபடிதான் செய்தேன். ஆனால் இருவருக்கும் சண்டை சச்சரவுதான் அதிகமாகிவிட்டது. இருவருக்கும் நீங்கள்தான் அறிவுரை சொல்ல வேண்டும்" என்று கூறி "பகவதி, கீதா இங்கே வாங்க. என் குரு வந்திருக்கிறார்" என்று குரல் கொடுத்தானாம். இந்தமாதிரி சீடனை என்ன செய்வது?.
குரு என்பவர் அறிஞர் அல்ல. ஆசிரியர் அல்ல. அவர் குறிப்பிட்ட இலக்குக்குப்போக பாதை காட்டும். உயிருள்ள வரைபடம். உங்களுக்கு வேதனைகளிலிருந்து விடைபெற வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அந்தச் சூழலை உருவாக்கித் தருபவரே குரு. அவர் உங்கள் அகங்காரத்துக்குத் துணை போகமாட்டார். அதைக் கூறு போட்டு அறுப்பார். யாருடன் இருந்தால் மிக வசதியாக உணர்கிறீர்களோ அவர் சரியான குரு அல்ல. யாருடைய அருகாமையில் நீங்கள் அசௌகர்யத்தை உணர்ந்தாலும் அவரை விட்டு விலகமுடியாமல் விரும்பி ஏற்கிறீர்களோ அவரே உண்மையான குரு.
உங்களின் இன்றைய நிலை அழிந்தால்தான் இன்னும் பெரிதாக ஒன்றை அனுபவிக்கக் தயாராக இருப்பீர்கள். உங்கள் கவலைகளை அறுத்து எல்லையற்ற தன்மையை ருசிக்கச் செய்பவரே குரு.