என்ன செய்து கொண்டிருந்தாலும் ஏன் தனிமையில் இருந்தால்கூட அலைபாய்ந்து மகிழ்ச்சியற்றுத் தவிக்கிற மனதினை ஒரு நிலையில் வைக்க வழி என்ன?
காரணம், நாம் என்ன செய்தாலும் மனம் 100 சதவீதம் அதில் ஈடுபடுவதில்லை. 47 சதவீதம் செய்துவிட்டு மனம் வேறு எதிலாவது தாவுகிறது. வாழ்க்கைப் பயணம் என்பதே தேடல் தான். வீடு, நல்ல வேலை, பதவி புகழ் உறவுகள் என தேடுதல் மாறுபட்டதாக இருந்தாலும் பொதுவாக அது மகிழ்ச்சியான தேடல் என்பதுதான். எல்லாம் கிடைத்தாலும் மனதில் மகிழ்ச்சி இல்லை என்றால் மகிழ்ச்சி எதில் ஒளிந்திருக்கிறது.?
மேலை நாடு ஒன்றில் பலதரப்பட்ட மனிதர்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தினார்கள். யாருக்கு எந்த செயலைச் செய்யும்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை வைத்து மகிழ்ச்சிக்கான சூத்திரத்தைக் காணத்தான் அந்த ஆய்வு. ஆனால் அவர்களால் முடிவியவில்லை. மகிழ்ச்சியின் அளவை நிர்ணயிக்கும் போதேல்லாம் அது ஒரு நிலையாக இல்லாமல் நொடிக்கு நொடி மாறுபட்டுக் கொண்டே இருந்தது. பொதுவாக மனம் அலைபாயும் போது தேவையற்ற விஷயங்களையே நினைக்கிறது. நடக்காத ஒன்றிற்காக ஏங்குகிறது. அந்த சமயம் செயலோடு எண்ணம் ஒன்று படாமல் அலைபாயத் தொடங்கினால் மகிழ்ச்சி வராமல் அயர்ச்சிதான் வருகிறது.
அலைபாயும் மனதை வரமாகவோ சாபமாகவோ மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது. அலைபாய்கிற மனதை எதிர்மறையாக நினைக்காமல் ஒரே சமயத்தில் பல விஷயங்களை சிந்திக்கக் கூடிய திறமை நமக்கு இருக்கிறது என்று பாசிடிவாக எண்ணும் போது அதையே கூடுதல் திறமையாக மாற்றிக் கொள்ள இயலும். உங்கள் மனதைக் கட்டுக்குள் வைத்து வருத்தமான தருணங்களை நோக்கிச் செல்வத்திலிருந்து அதை திசை மாற்றி சந்தோஷமான விஷயங்களை நோக்கி நகர்த்தலாம்.
நீங்கள்ஒரு நாற்காலியில் நன்கு அமர்ந்து கொண்டு சில வினாடிகள் கழித்து எழுந்திருங்கள். பிறகு அதே நாறாகாலியில் அமர்ந்து உங்கள் நண்பர் அல்லது உறவினரை உங்களுக்கு எதிரே நின்று ஒற்றை விரலை உங்கள் நடு நெற்றியில் வைக்கச் சொல்லுங்கள். இப்போது வழக்கம் போல் எழுந்திருப்பது கஷ்டமாக இருக்கும். ஒரு விரல் உங்கள் உடலைவிட வலிமையானதா? நிச்சயமாக இல்லை. ஆனால் தொடுதல் உணர்வு உங்கள உடலின் ஆதி மையத்தை அசைய விடாமல் செய்வதால் நீங்கள் வலுவிழந்து போனதாக உணர்வீர்கள்.
இப்படித்தான் மனம் அலைபாயும்போது எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மகிழ்ச்சியின் மையத்தில் கை வைத்து சந்தோஷத்தை உணர விடாமல் செய்கிறது. எந்த வேலையாக இருந்தாலும் அதில் மனம் ஒன்றியச் செய்யுங்கள். மனம் அலைபாயத் தொடங்கினால் அதை இயல்பான உணர்வாக எடுத்துக் கொண்டு ஒரு தேர்ந்த கால்பந்தாட்ட வீரர், எந்த இடத்தில் இருக்கும் பந்தையும் கோல் நோக்கியே நகர்த்துவது போல் அலைபாயும் மனதை சந்தோஷ நிகழ்வுகளை நோக்கி நகர்த்துங்கள். உங்கள் மனம் மகிழ்ச்சி என்ற இலக்கையே நோக்கி நகரும். அதனால் என்றும் மகிழ்ச்சி நிறையும்.