வெற்றி என்பது ஒவ்வொரு நபர்களுக்கு மாறுபட்டதாக இருக்கும். ஆனால் எந்த வெற்றியாக இருந்தாலும் அதை அடைவதற்கான பாதையில் சில மதிப்புமிக்க திறன்கள் மிகவும் முக்கியம். இந்தப் பதிவில் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலில் வெற்றி அடைவதற்கு அடிப்படையான 3 அத்தியாவசியத் திறன்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Emotional Intelligence: உணர்ச்சி நுண்ணறிவு என்பது உங்களின் உணர்ச்சிகளையும், மற்றவர்களின் உணர்ச்சிகளையும் அடையாளம் காண்பது, புரிந்து கொள்வது மற்றும் நிர்வகிக்கும் திறனைக் குறிக்கிறது. இது சுயக் கட்டுப்பாடு, சமூகத் திறன் மற்றும் சிறப்பான கம்யூனிகேஷன் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்தத் திறன் உங்களுக்கு இருந்தால் மட்டுமே வலுவான உறவுகளை உருவாக்க முடியும், பிரச்சினைகளில் இருந்து வெளிவர முடியும். வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களை தீர்ப்பதற்கு உணர்ச்சி நுண்ணறிவு மிகவும் அவசியமானதாகும்.
பின்னடைவுகளிலிருந்து மீண்டெழும் திறன்: வாழ்க்கையில் முன்னேற்றங்களை விட பின்னடைவுகளே அதிகமாக இருக்கும். ஆனால் பின்னடைவுகள் இருந்தாலும், அதிலிருந்து மீண்டெழும் திறன் ஒருவனை வெற்றியடையச் செய்கிறது. பல தோல்விகள் இருந்தபோதிலும் தைரியத்தையும், உறுதியையும், தொடர் முயற்சியையும் இந்தத் திறமையே நிர்ணயம் செய்கிறது. வாழ்க்கையில் வளர்ச்சியடைய விரும்பும் நபர்கள் பின்னடைவுகளைத் தோல்வியாக பார்க்காமல், பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பார்க்கின்றனர். இது அவர்களின் மனநிலையை நேர்மறையாக மாற்றி புதிய விஷயங்களை நோக்கி தைரியமாக செல்ல உந்துகிறது.
தொடர்ச்சியான கற்றல்: வேகமாக முன்னேறி வரும் இன்றைய உலகில் தொடர்ச்சியான கற்றல் என்பது உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் திறன் படைத்த ஒன்றாகும். தொடர்ச்சியான கற்றல் மனநிலையில் இருப்பவர்களுக்கே, புதிய விஷயங்களைப் புரிந்துகொண்டு வாழ்க்கையை திறம்பட எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது தெரியும். எனவே உங்கள் Comfort Zone-க்கு வெளியே சென்று பல விஷயங்களைத் தொடர்ச்சியாகக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கற்றலை நீங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டால், வெற்றியும் உங்களிடம் நெருங்கி வரும். தொடர்ச்சியான கற்றல் உங்கள் அறிவை விரிவு படுத்துவது மட்டுமல்லாமல், சிக்கலைத் தீர்க்கும் திறன்கள், படைப்பாற்றல் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாறும் நுட்பங்கள் அனைத்தையும் கற்றுத் தருகிறது.
இந்த 3 திறன்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதில் சிறப்பானவர்களாக மாற முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக நிச்சயம் ஒருநாள் வெற்றி உங்களைத் தழுவிக் கொள்ளும்.