வெற்றிப் பாதையின் முதல் படி கீழ்ப்படிதலாகும்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

காலை எழுவதிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை நேரத்திற்கு கீழ்ப்படிய கற்றுக் கொண்டவர்கள்தான் உழைப்பில் சிறந்த வெற்றியாளர்கள் ஆகிறார்கள். கீழ்ப்படிதல் என்பது ஒருவகை ஒழுக்கம். ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு நிர்வாகம் விதிக்கின்ற விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுதான் அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகைக்கும்.

ஒவ்வொரு கீழ்படிதலிலும் ஓர் அதிகாரம் ஒளிந்திருக்கிறது. அந்த அதிகாரத்தின் நியாயத்தன்மையை பொறுத்தே கீழ்படிதலுக்கான பலன் நமக்கு வந்து சேரும். ஆசிரியரை மாணவர் நம்புவதும், நிர்வாகத்தினரை பணியாளர்கள் நம்புவதும், பெற்றோரைப் பிள்ளைகள் நம்புவதும் முழுமையான கீழ்ப்படிதலுக்கு வழி வகுக்கும்.

நாம் யாரை நம்பி கீழ்ப்படிகிறோமோ இல்லையோ முதலில் நம்மை நம்பி நமக்கு நாமே கீழ்ப்படிய கற்றுக்கொண்டால் கட்டளையிடும் பதவி தானாக வந்து சேரும். இயற்கை சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழ கற்றுக் கொள்வதில்தான் மனித இனம் வெற்றியடைந்ததாக கூறப்படுகிறது. கீழ்ப்படிதல் என்பது அடிமைத்தனம் அல்ல. கீழ்ப்படிதலின் மூன்று முக்கிய குணாதிசயங்கள் ஒழுக்கம், நேரம் தவறாமை மற்றும் கடமை உணர்வுடன் இருப்பதாகும்.

கீழ்ப்படிய கற்றுக் கொள்ளாதவர்கள் ஒரு நல்ல தலைவராக இருக்க முடியாது. உலகில் எந்த ஒரு பெரிய தலைவரும் நேரம் தவறாமல், நேர்மையாக, ஒழுக்கமாக, கடமை உணர்வுடன் இல்லாமல் பெரிய ஆளாகவில்லை. இவை அனைத்தும் கீழ்ப்படிதலின் பிரிக்க முடியாத பண்புகளாகும். தலைமைத்துவத்தில் கீழ்ப்படிதலின் முக்கியத்துவம் ஒரு உயர் அதிகாரியின் கட்டளையைப் பின்பற்றுவது ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கத்தை வளர்க்கும்.

கீழ்ப்படிதல் என்பது எல்லா இடங்களிலும் மிகவும் போற்றப்படுகிறது. பாராட்டப்படுகிறது. மதிக்கவும் படுகிறது. சட்டங்களையும் விதிகளையும் மதிக்கவும் அவற்றிற்கு கீழ்ப்படியவும் கற்றுக் கொண்டால் கட்டளையிடும் பதவி தானாக வந்து சேரும்.

ஒவ்வொரு மனிதனும் கட்டளை இடவே விரும்புகின்றான். கீழ்ப்படிவதற்கு யாரும் தயாராக இல்லை. பெற்றவர்கள், பெரியவர்கள், ஆசிரியர்களின் பேச்சுக்கு கீழ்படிந்து,  மரியாதை அளித்து நடந்து கொள்வதுடன் "நான்" என்ற கர்வம், ஆணவம் இல்லாமலும் இருப்பது அவசியம். 

முதலில் கீழ்ப்படிய கற்றுக் கொண்டு தன்னம்பிக்கை யுடனும், கடின உழைப்பாலும் நாம் நினைப்பதை சாதிக்க ஆரம்பித்தால் கட்டளை இடும் பதவி தானாகவே‌ நம்மை வந்தடையும். தலைமைப் பதவியை அடைய அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறந்த முன்மாதிரியாகவும், நன்கு வழி நடத்துபவர்களாகவும் திகழ வேண்டும். பதவிகள் வந்து சேர முதலில் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும். அதற்கு சிறந்த நற்பண்புகளும், அணுகு முறையும், ஒழுக்கமும் அவசியம். 

இதையும் படியுங்கள்:
துயரங்களை ஏற்க வேண்டாம். ஒப்புக் கொள்ளலாம்!
Motivation article

சவால்களை சந்திப்பதில் சுணக்கம் கூடாது. நெருக்கடியான சமயங்களிலும் விஷயங்களை திறம்பட கையாளத் தெரிய வேண்டும். தொலைநோக்குப் பார்வை அவசியம். சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி பொதுநலம் காக்க வேண்டும். ஒரு நல்ல தலைவர் என்பவர் உண்மையானவராகவும், ஆளுமைத்திறன் மிக்கவராகவும், எதிலும் வெளிப்படைத் தன்மை நிறைந்தவராகவும், தொலைநோக்குப் பார்வையுடன் இருந்திட வேண்டும்.

மனித வாழ்வில் வெற்றிப் பாதையின் முதல் படி கீழ்ப்படிதலாகும். இதனை கற்றுக் கொண்டால் வாழ்வில் அனைத்தும் தானாகவே வந்து சேரும். செய்வோமா? 

logo
Kalki Online
kalkionline.com