

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களை மிகவும் சாதாரணமானவர்களாகவே கருதிக்கொள்கிறார்கள். சாதனையாளர்கள் அல்லது ஞானிகள் என்பவர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் என்றும், அவர்களுக்கு மட்டுமே சிறப்புச் சக்திகள் இருப்பதாகவும் நாம் நம்புகிறோம். ஆனால் ஓஷோ இந்தக் கருத்தை முற்றிலுமாக மறுக்கிறார்.
அவரைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போதே முழுமையான ஆற்றலுடனும், ஆழமான அறிவுடனும்தான் பிறக்கிறான். ஆனால் நாம் வாழும் முறை தான் நம்மைச் சாதாரண மனிதர்களாகச் சுருக்கிவிடுகிறது. நமது தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, விழிப்புணர்வுடன் வாழத்தொடங்கினால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்தப் பிரம்மாண்டத்தை வெளிக்கொண்டு வர முடியும். அதற்கான வழிமுறைகளை ஓஷோ மிகவும் அழகாக விளக்கியுள்ளார்.
இயந்திரத்தனமான வாழ்க்கை!
நாம் வளரும்போதே இந்தச் சமூகம் நமக்கு ஒரு கண்ணாடியை மாட்டிவிடுகிறது. எதை விரும்ப வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதைச் சாதிக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் மற்றவர்களே தீர்மானிக்கிறார்கள். இதனால் நாம் நம்முடைய சுயத்தை இழந்துவிட்டு, பிறர் இட்ட கட்டளைப்படி வாழும் இயந்திரங்களாக மாறிவிடுகிறோம்.
இது ஒரு இரவல் வாழ்க்கை. நமது ஆசைகள் கூட நம்முடையவை அல்ல, அவை நம் குடும்பத்தாலோ அல்லது சமூகத்தாலோ திணிக்கப்பட்டவை. இப்படி இயந்திரத்தனமாக வாழ்வதால் நமது ஆற்றல் வீணாகிறது. இந்த உறக்க நிலையிலிருந்து வெளியே வருவதுதான் மாற்றத்தின் முதல் படியாகும்.
விழிப்புணர்வு!
வாழ்க்கையை மாற்றுவதற்குப் பெரிய பயிற்சிகளோ அல்லது தியானங்களோ தேவையில்லை என்று ஓஷோ கூறுகிறார். அதற்குத் தேவைப்படுவதெல்லாம் 'விழிப்புணர்வு' மட்டுமே. விழிப்புணர்வு என்பது உங்களை நீங்களே விமர்சிப்பது அல்ல, மாறாக உங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், செயல்களையும் ஒரு சாட்சியாக நின்று வேடிக்கை பார்ப்பது.
கோபம் வந்தால் அதை அடக்காமல், எனக்குக் கோபம் வருகிறது என்பதை உணர்ந்து கவனிப்பது. இப்படிச் செய்யும்போது அந்த உணர்ச்சி தானாகவே கரையும். சாப்பிடுவது, நடப்பது, வேலை செய்வது என அன்றாடச் செயல்களை முழுமையான கவனத்துடன் செய்யும்போது, அந்தச் சாதாரணச் செயல்களே புனிதமானதாக மாறுகின்றன.
ஒப்பீடு!
மனிதர்களின் மகிழ்ச்சியை அழிக்கும் மிக முக்கியக் காரணம் ஒப்பீடு. ரோஜாப்பூ ஒருபோதும் தாமரைப் பூவைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. அது அதனுடைய இயல்பில் பூத்து மகிழ்கிறது. ஆனால் மனிதர்கள் மட்டுமே தங்களைப் பிறரோடு ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள். போட்டி மனப்பான்மை பதற்றத்தை உண்டாக்குமே தவிரச் சிறப்பான வாழ்வைத் தராது. உங்கள் தனித்தன்மையை உணர்ந்து, உங்கள் இயல்பின்படி வாழ்வதே சிறந்தது.
முழுமையான ஈடுபாடு!
எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழுமையாக உங்களைக் அர்ப்பணிக்க வேண்டும். அரைகுறை மனதுடன் செய்யும் வேலைகள் அதிருப்தியை மட்டுமே தரும். சமைப்பதாக இருந்தாலும் சரி, அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படும்போது காலம் மறைந்துபோகும், ஒரு விதமான ஆனந்தம் பிறக்கும். உங்களைச் செதுக்கிக் கொள்கிறேன் என்று சொல்லிப் போராடத் தேவையில்லை. உங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, விழிப்புணர்வுடன் வாழ்ந்தாலே மாற்றம் தானாக நிகழும்.
அசாதாரண மனிதராக மாறுவது என்பது உலகப் புகழ் பெறுவதோ அல்லது மற்றவர்களின் கைதட்டலைப் பெறுவதோ அல்ல. அது உங்கள் சொந்த இயல்பில் முழுமையாக, விழிப்புணர்வுடன் வாழ்வதாகும். வெளிப்புற அங்கீகாரத்தைத்தேடி ஓடுவதை நிறுத்திவிட்டு, உங்களுக்குள் இருக்கும் மௌனத்தைக் கேட்கத் தொடங்குங்கள். அந்த மௌனத்தில் தான் உங்கள் உண்மையான முகம் தெரியும்.