அனைவருடைய உள்ளங்களிலும் எப்போதும் ஏதாவது கவலைகள் குடி கொண்டிருக்கின்றன. உன் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது இரண்டு மடங்காகும். கவலையே மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறையும். எனவே உங்கள் கவலைகளை மற்றவர்களிடம் மனம் திறந்து சொல்லுங்கள். அப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் நபர் உங்களுக்கு உண்மையானவராக இருக்க வேண்டியது அவசியம்.
இல்லாவிட்டால் அவர்கள் உங்களுக்கு தவறாக வழிகாட்டலாம் அல்லது உங்கள் பிரச்சனைகளை ஊர் முழுக்க சொல்லிவிடுவார். அது உங்களுக்கு கவலையை இன்னும் அதிகமாக்கி விடும். கவலை மாறுபடும். இறுதிவரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்து விடுமோ, என்ற கவலை சிலருக்கு.
கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. கவலை இல்லாத மனிதர்கள் என்று இந்த உலகில் யாரும் இல்லை, எல்லோருக்கும் கவலைகள் உண்டு.
எதற்காக கவலைப்பட வேண்டும், எப்படிப்பட்ட கவலைகள் அவசியம் என்பது மட்டும் ஒவ்வொருவரிடமும் மாறுபடும். சின்ன விஷங்களுக்கு கவலையடையாதீர்கள். நமக்கு நெருக்கடியாக வந்து நிற்கும் பெரிய பிரச்சனைகளுக்கு கவலைப்படலாம். இந்த கவலை நம்மை தீர்வுகள் நோக்கி நகர்த்தும். ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கவலைப்பட்டால் மகிழ்ச்சியை தொலைத்து விடுவோம். ஆர்வத்துடன் எதையும் செய்யும் திறனை இழந்து விடுவோம். கண்ணீர் விட்டால் மனம் லேசாகும்.
நமக்கு மிகுந்த கவலை தரும் ஒரு விஷயத்தை நினைத்து உடைந்து அழுவதும் நல்லது என்கிறார்கள் மனநல நிபுணர்கள். மனதில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் நினைத்து கண்ணீர் சிந்தினால் கண்ணீரோடு சேர்ந்து பிரச்சனையும் கரைந்து போகும். கவலையின் கனம் குறைந்து மனம் லேசாகும். மனதில் பேசி பதில் பெறுங்கள். மனதில் இருக்கும் கவலைகள், கேள்விகள், தவிப்புகள், கோபங்கள் என மற்றவருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒரு விஷயத்தை நீங்கள் உங்களுடனே பேசிக்கொள்ளுங்கள்.
உங்கள் கவலையைத் தீர்க்கும் பதிலை உங்கள் மனதிடமிருந்தே பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்குள்ளேயே இப்படி பகிர்ந்து கொள்வதால் சிறந்த தீர்வு கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனதில் போட்டு பூட்டி வைக்கக் கூடாது. நன்றாக மூடப்பட்ட பாட்டிலில் காற்றை திணிப்பதை போன்று, நமது உள்ளத்தில் கவலைகளை திணித்து பூட்டி வைக்கக்கூடாது. அப்படி செய்தால் உள்ளத்தில் இருக்கும் கவலைகளின் காரணமாக சோர்வு, தோல்வி, மனப்பான்மை, வாழ்க்கையில் விரக்தி போன்றவை ஏற்படும்.
பயமே இருக்கக் கூடாது. பயம் என்ற உணர்வு நிரந்தரமானால் மனதில் கவலை குடியறிவிடும். அந்த கவலை வாழ்க்கையை நரகமாக்கி விடும். கவலையில் வீழ்ந்து விடாமல் வீழ்கிறபோதெல்லாம் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் எழுந்து விடுங்கள். மனதில் உறுதி இருந்தால் சூரியனைக் கண்ட பனித்துளி போல கவலைகள் விலகிவிடும். கவலைகளை ஒதுக்கிவாழ்க்கையில் வெற்றி பெறதுணிவுடன் செயல்படுங்கள்.