

கலை என்பது ஒரு உன்னதமான படைப்பு. ஆனால், அந்தப் படைப்பின் மீதான ஈடுபாடு எல்லையைத் தாண்டி வெறியாக (Obsession in life) மாறும்போது, அது படைப்பாளியையே அழித்துவிடும் என்பதற்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம்.
ஒரு ஓவியன் தான் படைக்கும் ஓவியத்தில் உயிரோட்டத்தைத் தேடி, மனிதாபிமானத்தை மறந்தால் நேரும் விளைவை இக்கதை சித்தரிக்கிறது.
ஒரு ஊரில் ஓவியர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது; அதாவது, அவர் கண்களால் பார்ப்பதை மட்டுமே அவரால் வரைய முடியும். கண்களால் பார்க்க முடியாததை அவரால் வரைய முடியாது. இதன் காரணமாக, அவர் மக்களை அழைத்து நிறைய கொடுமைகள் செய்து, அதை ஓவியமாக வரைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள் அந்த நாட்டு அரசர் இவரை அழைத்து, தனக்கு 'நரகத்தை' ஓவியமாக வரைந்து தரும்படி கூறினார். அந்த ஓவியரும் நரகத்தில் என்னவெல்லாம் கொடுமைகள் நடக்கும் என்று வாசித்தாரோ, அதை அங்குள்ள மக்களுக்குச் செய்து பார்த்து, பிறகு ஓவியமாக வரைந்து கொண்டார்.
அந்த ஓவியர் நரகத்தைப் பற்றிய ஓவியத்தை 90 சதவீதம் முடித்துவிட்ட பிறகு, ஒரு விஷயம் அவருக்கு ஞாபகம் வந்தது. அதில் 'எரியும் பல்லக்கு' என்ற ஒரு காட்சி இடம்பெற வேண்டும். அந்த எரியும் பல்லக்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த, நீளமான கூந்தலை உடைய பெண் ஒருத்தி கத்திக்கொண்டிருக்க வேண்டும்.
இவருக்கு இந்தக் காட்சியை இப்போது அந்த ஓவியத்தின் நடுவிலே வரைய வேண்டும் என்று ஆசை பிறந்தது. அரசரிடம் இப்படி ஒரு காட்சியை நிகழ்த்திக் கொடுக்குமாறு கோரினார். அரசரும் ஒரு பெண்ணைப் பல்லக்கில் அமர வைத்து, சுற்றிலும் தீயை மூட்டிவிட்டார். அந்தப் பெண் அலறும் சத்தம் மற்றவர்களின் அடிவயிற்றைப் பிரட்டும் அளவுக்குக் கொடூரமாக இருந்தது. ஆனால், ஓவியரோ படம் வரைவதிலேயே கவனமாக இருந்தார்.
அந்த ஓவியத்தை வரைந்து முடித்த உடன் ஓவியருக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது. அந்தப் பல்லக்கில் எரிந்து கொண்டிருந்தது தனது சொந்த மகள் என்பதுதான் அது! இதை அறிந்ததும் மனம் உடைந்து போன ஓவியர் தற்கொலை செய்துகொண்டார்.
நீதி: சில நேரங்களில் நாம் சில விஷயத்தின் மீது வெறித்தனமாக இருப்போம். அத்தகைய அதீத ஈடுபாடு, நம்மையே அழிக்கும் ஆபத்தையும் கொண்டு வரும்.