வாழ்க்கையில் நிம்மதி அவசியம். அதனை எவ்வாறு அடைவது என்பதைக் குறித்த ஒரு கதையைப் பார்ப்போம்.
ஒரு காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் மூன்று செங்கற்கள் மட்டுமே இருந்தன.
தூங்கும்போது, ஒரு கல்லை தலைக்கும், ஒரு கல்லை இடுப்பிற்கும், ஒரு கல்லை காலுக்கும் வைத்துக்கொண்டு, தூங்கிவிடுவார். ஏனென்றால், மழை பெய்தால் கூட, அவருக்கு கீழே ஓடிவிடும். அளவான தூக்கம் மட்டுமே கொள்வார்.
சாப்பிடும்போது, மூன்று கற்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு, அதன் மீது உணவினைப் போட்டு சாப்பிடுவார். ஏனென்றால், தரையில் வைத்தால், மண் சோறுடன் கலந்துவிடும். மிகவும் குறைவாக உண்ணுவார்.
அமரும்போது, மூன்று கல்லையும் சேர்த்து ஆசனமாக வைத்துக் கொண்டு, அமர்ந்து விடுவார். ஏனென்றால், எந்த ஒரு பூச்சியும், கல்லைச் சுற்றிச் சென்றுவிடும்.
இவ்வாறு மூன்று கற்களை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்.
எப்போதும் சந்தோஷமாக இருந்த முனிவரை, தனது கஷ்டங்களுக்கு தீர்வு வேண்டி ஒரு அரசன் அவரை சந்திக்க வந்தான். அப்போது முனிவர் இவ்வாறு மூன்று கற்களுடன் கஷ்டப்படுவதைக் கண்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினான். முனிவர் மறுத்தபோதும், அரசனின் பிடிவாதம் காரணமாக ஒத்துக்கொண்டார்.
அரசனின் அரண்மனையில், முனிவருக்கு பொன்னால் ஆன, பலகை போடப்பட்டது. தங்க தாம்பாளங்களில் உணவு வைக்கப்பட்டது. முனிவர் முன்னைப் போலவே, செங்கற்களை சேர்த்து வைத்து, அதில் எப்போதும் சாப்பிடும் சோறின் அளவே போட்டுக் கொண்டு உண்டார்.
அரசனின் அரண்மனையில், அன்னப் பறவைகளின் இறகுகளால் ஆன ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் முனிவர் உறங்குமாறு கேட்டுக் கொண்டான். முனிவர் முன்னைப் போலவை, மூன்று கற்களை ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் போட்டு, அதன் மீது படுத்துக்கொண்டு உறங்கினார். அளவான தூக்கத்துடன், காலையில் எழுந்தார்.
மூன்று செங்கற்களையும் சேர்த்து, ஆசனம் செய்து, தியானத்தில் ஆழ்ந்தார்.
இது சில நாட்கள் தொடரவே, அரசன் முனிவர் காட்டில் வாழும் அதே வாழ்க்கை முறையை அரண்மனையிலும் கடைபிடிப்பதைக் கண்டு, முனிவர் தன்னிடம் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி, காட்டிலேயே அவரை விட்டு விட்டான்.
முனிவர், அரசனிடம் சொன்னார்;
'மன்னா. தேவைக்கு மீறிய ஆசைகளால்தான் துன்பங்கள் மலருகின்றன. எனவே, தேவையைச் சார்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொள். உன்னுடைய எல்லா துன்பங்களுக்கும் உன்னுடைய தேவைக்கு மீறிய ஆசைகள்தான் காரணம்.'
இதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அனுபோகப் பொருட்கள் மிக மிக உடல்நலம் கெடும்.
சொத்துக்கள் மிக மிக மன அமைதி கெடும்.
வீட்டில் பராமரிக்கப்படும் குடும்ப உறுப்பினர்கள் மிக மிக சுதந்திரம் கெடும்.
எனவே, தேவையை ஒட்டி வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம். ஆசைகளை சீரமைத்துக் கொண்டு, தேவையை ஒட்டிய ஆசைகளுக்குப் படிகட்டி, தேவையற்ற ஆசைகளை வடிகட்டுவோம். அவ்வாறு செய்தால், நம்மால் நிம்மதியாக வாழ முடியும்.