உலகத்தின் வரலாற்றை விட்டு கனவு காண்கிறவர்களை மாத்திரம் அகற்றிவிட்டால், அதில் படிப்பதற்கு எதுவுமே இருக்காது. இன்றைக்கு நாம் பார்க்கிற வளர்ச்சி என்பது கடந்த காலத்தில், எதிர் காலத்தைப் பற்றி கனவு கண்டவர்களின் கச்சிதமான தொகுப்பே ஆகும்.
இயேசு பெருமானின் மீது அவர் கனவு காணுகிறவர் என்று தானே குற்றச்சாட்டு வந்தது. வரப்போகிற மனிதனைப் பற்றி, வந்தாக வேண்டிய நாகரிகத்தைப் பற்றி அவர் கனவு கண்டதாலேதானே அவர் தீர்க்கதரிசி.
ஒருவர் ஏன் உட்கார்ந்து எழுத வேண்டும் என்றால், அவரே எழுத எழுத உளவியல்படி அவரது மனம் உறுதியாகி விடுகிறது. அந்த நிலையில் எந்தச் சூழ்நிலையிலும் தன்னை இழந்துவிடாத பேராண்மை அவருக்கு வருகிறது. இந்தக் காரணத்தாலேதான் ஒரு மந்திரச்சொல்லை திரும்பத் திரும்ப எழுதுவது என்கிற பழக்கமே நமது நாட்டில் வந்தது.
எழுத்தில் எப்பொழுதும் தனிக்கவனம் பெறுவது கவிதை. கவிதை எழுதுவது என்பது பாலில் இருந்து நெய்யை உருக்குவதற்குச் சமம். அதனால்தான் அது காலம் கடந்தும் போற்றப்படுகிறது. நூறு வரியில் கூறும் கதையை, இரண்டே வரியில் மிக அழகாக எடுத்துரைத்து விடும் இயல்பு கொண்டது கவிதை. உண்மையுடன் கொஞ்சம் கற்பனை கலந்திருந்தால் தான் கவிதை அழகு பெறும். அதனால்தான் கவிதைக்கு பொய்யழகு என்று பாடினார்கள்.
விவர அறிவு, நுண்ணறிவு, பகுத்தறிவு ஆகியவை ஒரு மனிதனின் வெற்றிக்கும், மனமகிழ்ச்சிக்கும் பெரிதும் உதவும் காரணிகள்.
பல்வேறு பொருள்கள், கருத்துக்கள் பற்றிய விவரங்களை அறிந்து வைத்திருத்தல் விவர அறிவு. அறிந்து கொள்ளும், புரிந்து கொள்ளும் திறன் மற்றும் அறிந்தவற்றை தக்க நேரத்தில் தக்க வகையில் பயன்படுத்தும் திறன் நுண்ணறிவாகும். அத்தகைய நுண்ணறிவைப் பயன்படுத்துவோருக்கு வெற்றி உறுதி.
அப்படி ஒரு நுண்ணறிவை பெற்ற நம் கவிஞர் கண்ணதாசனை மறக்க முடியுமா?
அவர் எழுதிய கவிதையில் "நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது. என்று எழுதி மேன்மை பெற்றது போல்,
நாணத்தை எழுதி பரிசு பெற்றதுடன் புகழ் வாய்ந்தவராக திகழ்ந்த ஒரு இங்கிலாந்து எழுத்தாளர், முதன் முதலாக எழுதிய கவிதைப் பற்றிய குட்டிக்கதையை நாமும் தெரிந்து கொள்வோமே!
ஒரு சமயம் இங்கிலாந்தில் கட்டுரைப் போட்டி நடந்தது. இயேசு கிறிஸ்து தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அளித்ததை பொருளாகக் கொண்டு கட்டுரை எழுத வேண்டுமென்று ஏற்பாடு. போட்டியில் பலர் கலந்து கொண்டனர். ஜான் பன்யன் என்ற புகழ் வாய்ந்த எழுத்தாளர் அப்போது சிறுவனாக இருந்தார். அவரும் அதில் கலந்து கொண்டார். எல்லோரும் பக்கம் பக்கமாக எழுதி தள்ளினர்.
ஆனால் பன்யன் மட்டும் ஒன்றுமே எழுதாமல் ஏதோ எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். கடைசி வரையிலும் ஒரு எழுத்து கூட தாளில் பதிவாகவில்லை. இன்னும் இரண்டு நிமிடம் உண்டு. அதன் பிறகு யாரும் எழுதக்கூடாது என்று அறிவித்தனர். அப்போதுதான் அவருக்கு எழுத வேண்டும் என்று தோன்றியது.
உடனே "தண்ணீர் தன் நாதனைக் கண்டு நாணத்தால் சிவந்தது" என்று ஒரு கவிதை வரியை தாளிலே எழுதிக் கொடுத்தார். அவருக்குத்தான் பரிசு கிடைத்தது.
அந்த கவிதை வரி எத்தனையோ செய்திகளை உணர்ச்சிகளைச் சொல்லாமல் சொல்லிவிட்டது. அதனால்தான் நாம் கவிதைக்கு அத்தனை உயர்வு கொடுக்கிறோம்.
உங்களிடம் உற்சாகம் வரும்போதுதான் நீங்கள் நினைத்தே பார்த்திராத திறமைகள் உங்களிடம் ஒளிந்து இருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.
அதிர்ஷ்டம் வந்து கதவைத் தட்டும் போது திறங்கள்-டூமாஸ்!