

"ஆண்டவன் உலகத்தின் முதலாளி, அவனுக்கு நாம் ஒரு தொழிலாளி" — கவிஞரின் வரிகளில் தான் எத்தனை ஆழம்!
குழந்தைப் பருவத்தில் நமக்குள் நல்ல மனமே குடியிருந்து வருவது வாடிக்கையானது. ஆனால், காலப்போக்கில் வயது ஆக ஆகத்தான் மனித மனங்களில் வேறுபாடுகள், வஞ்சகம், சூழ்ச்சி போன்ற எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கி, பலவிதங்களில் பாதிப்பை உண்டாக்குகின்றன.
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?" என்ற பாடலில், கவிஞர் மனித மனங்களின் முரண்பாடுகளை மிகச்சரியாகச் சுட்டிக்காட்டியிருப்பார்.
இத்தகைய பாகுபாடுகள் மனித மனங்களில் ஆதிக்கம் செலுத்துவது ஆரோக்கியமானதல்ல. இது குறித்துக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான மூன்று வித எதிர்மறை மற்றும் நேர்மறை எண்ணங்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.
"ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்"
என கவிஞர் மனித மனங்களின் உண்மைத் தன்மையை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்.
ஆசை: மனிதனுக்கு ஆசை வருவது இயற்கை. ஆனால், அதுவே 'பேராசை'யாக மாறும்போது, அது நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
கோபம்: கோபம் ஒரு மனிதனையும் அவனது வாழ்வையும் சீரழித்துவிடும்; முகத்தின் வசீகரத்தைக் குறைத்துவிடும். சொந்தபந்தம் மற்றும் நட்பு ரீதியிலான உறவுகளில் விரிசலையும் பாதிப்பையும் ஏற்படுத்த இதுவே முக்கியக் காரணியாகிறது.
களவு: களவு என்பது ஒரு பாவச்செயல். பிறர் பொருளைக் களவாடி, அதைப் பறிகொடுத்தவர்கள் மனம் நோக நம்மால் சந்தோஷமாக வாழ முடியுமா? அப்படியே களவு மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானதுதான்; அது என்றும் நீடிக்காது.
ஆக, இந்த மூன்றும் அமையப்பெற்ற ஒருவன், மனித வடிவில் நடமாடும் மிருகமே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அதே பாடலின் அடுத்த பகுதியில்,
"அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்"
என கவிஞர் எழுதியிருப்பார். மனிதன் தன் நல்ல குணங்களால்(good character) இறைநிலைக்குச் சமமாகக் கருதப்படுகிறான் என்பதே இதன் பொருள்.
அன்பு, நன்றி, கருணை: இவை இருக்கும் இடத்தில் தான் இறைவன் குடியிருக்கிறான்.
எந்தத் தருணத்திலும் அன்பைப் பிரதானமாகக் கடைப்பிடித்து, செய்நன்றி மறவாமல், அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு வாழ்வதே சிறந்த செயலாகும்.
மனிதன் தன் நல்ல பண்புகளை வளர்த்துக்கொண்டு, அனைவர் மனதிலும் அன்பு எனும் விதையை விதைக்க வேண்டும். ஆசை, கோபம், களவு எனும் களைகளை அகற்றி, நன்றி எனும் நீரைப் பாய்ச்சி, கருணை எனும் மகசூலை அறுவடை செய்து இறைவன் காலடியில் சமர்ப்பிக்கலாமல்லவா!